பதிவு செய்த நாள்
31 மே2020
22:53
வட்டி விகிதம் குறைந்து வரும் சூழலில், சேமிப்பு கணக்குடன் இணைந்த வைப்பு நிதி வசதி மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதல் பலன் பெறலாம்.ரிசர்வ் வங்கி ரெப்போ விகித்ததை குறைத்து வரும் நிலையில் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்து வருவதோடு, வைப்பு நிதி முதலீட்டிற்கான வட்டியும் குறைந்து வருகிறது.
மேலும் வங்கி சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதமும் குறைந்துள்ளது. ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கிற்கான வட்டி, 2.75 சதவீதமாக இருக்கிறது. மற்ற வங்கிகளும் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.
வைப்பு நிதி வசதி
வட்டி விகிதம் குறைந்து வரும் சூழலில், வாடிக்கையாளர்கள் ‘ஸ்வீப் இன் எப்.டி.,’ எனப்படும் சேமிப்பு கணக்குடன் இணைந்த வைப்பு நிதி வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் கூடுதல் பலன் பெறலாம். ஸ்வீப் இன் வசதி என்பது, சேமிப்பு கணக்கில் இருந்து வாடிக்கையாளர் குறிப்பிடும் தொகைக்கு மேல் உள்ள தொகையை வைப்பு நிதிக்கு மாற்ற வழி செய்கிறது. வைப்பு நிதி என்பதால், சேமிப்பு கணக்கிற்கான வட்டியை விட அதிக வட்டி பெறலாம். இந்த வைப்பு நிதிக்கான காலம் ஒன்று முதல் ஐந்தாண்டுகள் வரை இருக்கலாம். இதற்கான வட்டி விகிதம் வங்கிகளுக்கு இடையே மாறுபடலாம்.
எனினும் சேமிப்பு கணக்கு வட்டியை விட அதிகமாக இருக்கும்.வங்கிகள் இந்த வசதிக்கு வெவ்வேறு பெயர்கள் கொண்டு இருந்தாலும், இவற்றின் அடிப்படை ஒன்று தான். அதாவது, சேமிப்பு கணக்கில் உள்ள கூடுதல் தொகையை அதுனுடன் இணைந்த வைப்பு நிதிக்கு மாற்றி, அதிக வட்டி பெற வழி செய்வது. ஒரு சில வங்கிகளில் இந்த தொகை தானாக மாற்றப்படும். மற்ற வங்கிகள், இந்த வசதியை கேட்டு பெற வேண்டும்.
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி அளிக்கப்படுவதில்லை. இதற்கான தகுதி வங்கிக்கு வங்கி வேறுபடலாம். பொதுவாக, இந்த வசதியை பெற வங்கியில், குறிப்பிட்ட தொகைக்கான வைப்பு நிதி கணக்கு வைத்திருக்க வேண்டும்.
என்ன வேறுபாடு?
வழக்கமான வைப்பு நிதிக்கும், இந்த வசதிக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. வைப்பு நிதி எனில் முதிர்வு காலத்திற்கு முன் தொகையை விலக்கி கொள்ள முடியாது. அவ்வாறு விலக்கினால் சிறிது அபராதம் விதிக்கப்படும். ஆனால், சேமிப்பு கணக்குடன் இணைந்த வைப்பு நிதியில், சேமிப்பு கணக்கில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு மேலான தொகையை வைப்பு நிதிக்கு மாற்றிக்கொள்ளலாம். இடைப்பட்ட காலத்தில் சேமிப்பு கணக்கில் அதிக தொகை தேவைப்பட்டாலும், தயங்காமல் எடுத்துக்கொள்ளலாம். அந்த தொகை வைப்பு நிதியில் இருந்து சேமிப்பு கணக்கிற்கு மாற்றப்படும். அதற்கேற்ப வைப்பு நிதிக்கான வட்டி கணக்கிடப்படும். எந்தவித அபராதமும் கிடையாது.
கூடுதல் தொகையை வைப்பு நிதியாக மாற்றுவதன் மூலம், அதிக வட்டி பெறலாம் என்பதோடு, சேமிப்பு கணக்கின் பலனையும் தொடர்ந்து பெறலாம் என்பது இந்த வசதியின் சிறப்பம்சமாகும். மேலும், இந்த வசதி மூலம், அவசர தேவைக்கான தொகையையும் தனியே உருவாக்கி கொள்ளலாம். இடையே பணம் எடுத்துக் கொண்டாலும், எஞ்சிய தொகைக்கு தொடர்ந்து வட்டி கிடைக்கும். பொதுவாக, சேமிப்பு கணக்கில் அதிக தொகையை வைத்திருக்கும் வழக்கம் கொண்டவர்களுக்கு இந்த வசதி ஏற்றதாக இருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|