பதிவு செய்த நாள்
18 ஆக2020
21:50
புதுடில்லி:கொரோனா பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையிலும், நுகர்வோர் நம்பிக்கை ஓரளவு அதிகரித்துள்ளதாக, போஸ்டன் ஆலோசனை குழுமத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிறுவனம், கடந்த ஜூலை, 20ம் தேதி முதல், ஆக., 2ம் தேதி வரையிலான காலகட்டத்தில், 3,000 பேரிடம், நகரங்களிலிருந்து குக்கிராமம் வரையில், இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளது. ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிட்டத்தட்ட, 44 சதவீத நுகர்வோர், அடுத்த ஆறு மாதங்களில் அவர்களது வருவாய், கொரோனா காலத்துக்கு முன்பிருந்ததை விட குறைவாகவே இருக்கும் என தெரிவித்து உள்ளனர். இதுவே, கடந்த மே மாதம், 18ம் தேதி முதல், 23ம் தேதி வரையிலான கால கட்டத்தில் மேற்கொண்ட ஆய்வின்போது, 57 சதவீதம் பேர் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
இதேபோல், செலவு குறித்த நம்பிக்கையும் ஓரளவு சிறப்பாகவே இருக்கிறது. இதற்கு முந்தைய ஆய்வில், 53 சதவீதம் பேர், அடுத்த ஆறு மாதங்களில் செலவு குறைவாக இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போதைய ஆய்வில், 43 சதவீதம் பேரே இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.
நடவடிக்கை
மேலும், 53 சதவீதம் பேர், வேலைக்கு செல்வதாகவும்; வழக்கமான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாகவும் தற்போதைய ஆய்வில் தெரிவித்துள்ளனர். இது முந்தைய ஆய்வில், 15 சதவீதமாக இருந்தது.இதற்கு முந்தைய ஆய்வில், நண்பர்களை பார்க்கச் சென்றதாக, 10 சதவீதம் பேர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, 66 சதவீதம் பேர் நண்பர்களை பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், கொரோனாவுக்கு முந்தைய நிலையை, பல்வேறு விஷயங்களில் இன்னும் எட்டவில்லை என்றே பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போதைய ஆய்வு, கொரோனாவுக்கு பிறகான ஐந்தாவது ஆய்வாகும். ஒட்டுமொத்த ஆய்வையும் ஒப்பிடும்போது, நுகர்வோர் நடவடிக்கைகளில் முன்னேற்றம் தெரிய வந்துள்ளது.
நுகர்வோர் உணர்வில் மாற்றத்தைக் காண முடிகிறது. இதற்கு முந்தைய ஆய்வுகளின் போது, நுகர்வோர்களிடம் மிகுந்த பய உணர்வும்; பொருளாதாரம், வருமானம் குறித்த அதிக கவலையும் இருந்தன.ஆனால், சமீபத்திய ஆய்வில், அவர்கள் எச்சரிக்கையுடன் வாழ கற்றுக் கொள்வது தெரிய வந்துள்ளது.‘ஆன்லைன்’ மீட்சியை பொறுத்தவரை, சிறிய நகரங்களில் விரைவாக இருக்கிறது. சிறிய நகரங்களில், கொரோனாவுக்கு முன் அத்தியாவசிய பொருட்களை வாங்க சந்தைக்கு சென்றது போலவே, இப்போதும் செல்லத் துவங்கி இருப்பதாக, 36 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதுவே, நகரங்களில், 27 சதவீதமாக குறைந்து உள்ளது.
செலவுகள் செய்வது பல பிரிவுகளில் மேம்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை பொறுத்தவரை, ஆரோக்கியம், குடும்ப பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான செலவு முன்னிலை வகிக்கிறது.அடுத்து, தனிநபர் ஆரோக்கியம், பேக்கேஜ்டு உணவுகள், உடை, நுகர்வோர் மின்னணு பொருட்கள், மேக் அப் பொருட்கள் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.ஆனால், பயணம் மற்றும் குடும்பத்தினருடன் வெளியே செல்வது ஆகியவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை.
மின்னணு வர்த்தகம் வலுவாக முன்னேறி இருக்கிறது. கடந்த மூன்று, நான்கு மாதங்களில், ‘ஆன்லைன்’ மூலமான வர்த்தகத்துக்கு, புதிதாக, 20 சதவீதம் பேர் வந்துள்ளனர்.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|