பதிவு செய்த நாள்
02 மார்2021
09:38
கோவை மாவட்டத்தில், மோட்டார் பம்ப் செட், பவுண்டரி, கிரில் தொழில் என, 5,000க்கும் மேற்பட்ட தொழிலகங்கள் உள்ளன. இவற்றில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பணிபுரிகின்றனர்.
இரும்பு, காப்பர் உட்பட மூலப்பொருட்களின் விலையேற்றம் என்பது, கொரோனா ஊரடங்கு பாதிப்புகளில் இருந்து, குறிப்பாக சிறு, குறு, தொழில்முனைவோருக்கு மீளமுடியாத முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.அதிலும், மோட்டார் பம்ப் செட் தொழிலுக்கு முக்கிய மூலதனமான 'காப்பர்' விலை, கட்டுக்கடங்காத ஏறுமுகத்தில் உள்ளது. கோவையில் மட்டும், 3,000க்கும் மேற்பட்ட சிறு, குறு மோட்டார் பம்ப் செட் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்களை நம்பி, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 'ஜாப் ஆர்டர்' எடுத்து செய்து வருகின்றனர்.
தொழிற்சாலை, வீடு, விவசாயம் என, பல்வேறு தேவைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான மோட்டார் பம்ப் செட்கள் கோவையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம் வரை, இங்கிருந்து மோட்டார் பம்ப் செட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஒரு டன்னுக்கு...
சமீபகாலமாக, மூலப்பொருட்களின் தொடர் விலையேற்றம் காரணமாக, இதன் உற்பத்தி பாதியாக குறைந்துவிட்டது; பலர் உற்பத்தியை நிறுத்தி விட்டனர். பம்ப் செட் தொழிலுக்கு, முக்கிய மூலதனமான 'காப்பர்' விலை கிலோவுக்கு, 300 ரூபாய் என, ஒரு டன்னுக்கு, 3 லட்சம் ரூபாய் கூடியுள்ளதால், தொழில் நடத்த முடியாமல் சிறு, குறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.தவிர, பிளாஸ்டிக், பெட்ரோல், டீசல், போக்குவரத்து செலவு அதிகரிப்பு காரணமாக மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பதாக புலம்பும், பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள், தற்போது, அனைத்து வகை மோட்டார் பம்ப்செட்களின் விலையை, 15 சதவீதம் உயர்த்தியுள்ளனர்.
வேண்டும் தீர்வு
கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் (கோப்மா) மணிராஜ் கூறியதாவது:கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மோட்டார் பம்ப் செட் மூலப்பொருட்களின் விலை, 20 முதல், 60 சதவீதம் வரை அதிகரித்து விட்டது. உதாரணமாக, காஸ்டிங் விலை கிலோவுக்கு, 20 ரூபாய்; ஸ்டாம்பிக் 30 ரூபாய்; அலுமினியம் 35 ரூபாய் உயர்ந்துள்ளது. குறிப்பாக, 'காப்பர்' விலை, டன், 8.5 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், தற்போது, டன்னுக்கு, 3 லட்சம் ரூபாய் கூடிவிட்டது. இரும்பு, ஸ்டீல் ராடுகள் விலையும் கிலோவுக்கு, 15 முதல், 20 சதவீதம் அதிகரித்து விட்டது.
உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால், பம்ப்செட் உற்பத்தியை பலர் நிறுத்தி விட்டனர்.பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து வருவதால், போக்குவரத்து செலவு, 2,000 ரூபாய் வரை கூடியுள்ளது. பம்ப்செட்களின் விலையும், 300 முதல், 3,000 ரூபாய் வரை வகைக்கு ஏற்ப உயர்ந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் தொழில்முனைவோர், மூலப்பொருட்கள் விற்பனையாளர் உள்ளிட்டோருடன் கூட்டம் நடத்தி, விலையேற்ற பிரச்னைக்கு விமோசனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|