பதிவு செய்த நாள்
13 ஜூன்2021
23:29
அஞ்சலக சேமிப்புகளில் முதிர்வு தொகையை பெறுவதற்கு என்னை நேரே வரச் சொல்கிறார்கள். மூத்த குடிமகனான என்னால் போக முடியுமா?
புருஷோத்தமன், சிந்தாதிரிப்பேட்டை.
இது ஏற்கத்தக்கதல்ல. உண்மையில், நிதி அமைச்சகம் இதற்கு மாற்றுவழி செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் அஞ்சலகங் களுக்கு முதியவர்களை வரச் சொல்வது அபாயம். மகனோ, மகளோ, நெருங்கிய உறவினர் ஒருவர், முதிர்வு தொகையை பெறுவதற்கு அனுமதிக்கலாம். சான்றொப்பம் பெற்று, உரிய தொகையை வழங்கலாம்.
கடந்த 2020 – 21 அசெஸ்மென்ட் ஆண்டுக்கு வருமான வரி செலுத்தியபோது, 50 ஆயிரம் ரூபாய் ‘ரீபண்டு’ வரவேண்டும். ஆனால், அது என்னுடைய 2006 – 07ம் ஆண்டுக்கான வருமான வரி பாக்கிக்கு கழித்துக் கொள்ளப்பட்டது என்று இ – மெயில் வந்துள்ளது. நான் வரிகட்டாமல் இருந்ததில்லை. தற்போது அந்த விபரங்கள் இல்லை. எப்படி நான் என் ரீபண்டு தொகையை பெறுவது?
கே.தாரிணி, மின்னஞ்சல்.
நீங்கள் அனுப்பிய விபரங்களில், உங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட கடிதத்தின் விபரமும், செக்ஷன் 143 என்ற குறிப்பும் உள்ளது. அதாவது, அப்போது, நீங்கள் செலுத்திய வருமான வரியில் ஏதோ ஒரு தொகை மீதமிருந்துள்ளது, திருத்தம் இருந்தது என்பதையே அது குறிப்பிடுகிறது. தற்போது வருமான வரித் துறையின் புதிய தளம் செயல்பட துவங்கியுள்ளது. அதில் புகார் பகுதி உண்டு. அதில் உங்கள் குறையை தெரிவித்து பரிகாரம் தேடுங்கள்.
ஊரடங்கு காரணமாக என்னால் ‘பர்சனல்’ லோன் தவணையை செலுத்த முடியவில்லை. வேலைக்கும் போக முடியவில்லை. அடுத்த மாதம் தான் கட்ட முடியும், அதுவும் வட்டியில்லாமல். அப்படி வாய்ப்பு கிடைக்குமா?
எம்.ராஜேந்திரன், ரெட் ஹில்ஸ்.
நீங்கள் எந்த வங்கி என்று குறிப்பிடவில்லை. ‘கடன் மறுசீரமைப்பு 2.0’ திட்டத்தை வழங்கும்படி, வங்கிகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் விபரங்களுக்கு, நீங்கள் கடன் பெற்ற வங்கியை அணுகுங்கள்.
என்னிடம், 20 வருடங்களுக்கு முன்பு வாங்கிய, ‘பியர்லெஸ்’ பாலிசி உள்ளன. அதன் அலுவலகம் எங்கு உள்ளது?
பன்னீர்செல்வம், காரைக்குடி.
பொதுவாக, 7 ஆண்டுகளுக்கு மேலானால், மிச்சமிருக்கும் தொகை அனைத்தும், முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்துக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தர வின் படி, பியர்லெஸ் ஜெனரல் பைனான்சில் இருந்து, 1,514 கோடி ரூபாய், மத்திய அரசின் வசம் போய்விட்டது. இந்தச் சுட்டியில் http://www.iepf.gov.in/IEPFWebProject/SearchInvestorAction.do?method=gotoSearchInvestor போய், உங்கள் விபரங்களைக் கொடுத்து தேடவும். அதன் பின்னர், தொகையை பெறுவதற்கு மனு செய்யவும்.
ஐ.டி.பி.ஐ., நிறுவனத்தில், 1996ம் ஆண்டில், ‘டீப் டிஸ்கவுண்டு’ பத்திரம் 5,300 ரூபாய்க்கு வாங்கி னேன். அதை இப்போது எப்படி, எங்கே கொடுத்து பணம் திரும்ப பெறுவது? எவ்வளவு கிடைக்கும்?
ஸ்ரீ.கணேஷ். சென்னை.
கார்வி நிறுவனத்தின் (https://www.karvyonline.com/) ஐதராபாத் அலுவலகம் தான் இதன் பதிவாளர். 2000ம் ஆண்டே உங்கள் பத்திரம் முதிர்வடைந்துள்ளது. 5,300 ரூபாய்க்கு வாங்கிய பத்திரம், 10 ஆயிரம் ரூபாயாக ஆகியுள்ளது. கார்வி அலுவலகத்தையோ, வலைதளத்தையோ தொடர்பு கொண்டு, மேல் நடவடிக்கை எடுக்கவும்.
'எஸ்.பி.ஐ., மற்றும் எச்.டி.எப்.சி.,' கிரெடிட் கார்டுகள் வைத்துள்ளேன். கடன் 'ஒத்திவைப்பு' திட்டத்தை பயன்படுத்தி, எஸ்.பி.ஐ., மொத்த தொகையை 'பிளெக்ஸி பே'வாக மாற்றி விட்டேன். எச்.டி.எப்.சி.,யில் முடியவில்லை. எவ்வாறு அவர்களின் மேலதிகாரி கவனத்திற்கு கொண்டு செல்வது?
ஜெ.அமர்நாத், கோயம்புத்துார்.
எச்.டி.எப்.சி., வங்கி, 2021ம் ஆண்டுக்கான, ‘மறுசீரமைப்பு 2.0’ என்ற வாய்ப்பை வழங்க திட்டமிட்டு உள்ளது என்று, அவ்வங்கியின் வலைதளம் தெரிவிக்கிறது. விரைவில் இதற்கான சுட்டி, அந்த வலைதளத்தில் கொடுக்கப்படும். இந்த, ‘கடன் மறுசீரமைப்பு 2.0’ வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, ஏப்ரல் 1, 2021 அன்று வரை, உங்கள் மாதாந்திர தவணை தொகையை ஒழுங்காக கட்டி, கடனில் எந்த பாக்கியும் இல்லாமல் ஸ்டாண்டர்டாக வைத்திருப்பது அவசியம்.
ஒரு வங்கியில், சேமிப்பு கணக்கு துவங்கும்போது, காசோலை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவை வேண்டாம் என்று சொல்லித்தான் கணக்கை ஆரம்பித்தேன். ஆனால், டெபிட் கார்டு பிடித்தம் என்று கூறி, 236 ரூபாய் பிடித்தம் செய்திருக்கிறார்கள். 2 மாதம் ஆச்சு. இன்னும் வரவு வைக்காமல் இழுத்தடிக்கிறார்கள். என்ன செய்ய?
ரங்கநாதன், சென்னை.
இன்றைக்கு எந்த வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கினாலும், கணக்கு புத்தகமும், டெபிட் கார்டும் கொடுத்துவிடுவர். நீங்கள் வேண்டாம் என்று மறுக்க முடியாது. ‘டெபிட் கார்டு’ வேண்டாம் என்று கருதினால், அதை நான்காக உடைத்து, வேண்டாம் என்று கடிதம் எழுதி, வங்கியிலேயே கொடுத்து விடுவது தான் சாத்தியம். ஆனால், உங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கார்டில் இருக்கும் நவீன ‘சிப்’பின் விலையை நீங்கள் செலுத்தி தான் ஆக வேண்டும்.
‘பாண்டியன் கிராம வங்கி’யில், நகைக்கடனை அடைத்து திரும்ப பெறும்பொழுது, எவ்வளவு நாள், வட்டி எவ்வளவு என்று ரசீது மூலம் தெரிவிக்கப்படுவதில்லை. ஏன்?
ஆர்.கோவிந்தன், ராமநாதபுரம்.
இவையெல்லாம் நகையை அடகு வைக்கப் போகும்போதே, குறித்து தரப்படுவது. மாதாமாதம் தவணை தொகையை கட்டியதற்கான ரசீதையோ, பாஸ்புக்கையோ பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். நகை உங்கள் கையில் திரும்பிவிட்டது என்றாலே, அதன்மீது வாங்கப்பட்ட கடன் அடைந்துவிட்டது என்று தான் அர்த்தம்; கவலை வேண்டாம்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ – -மெயில் மற்றும் வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்,
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 14
என்ற நமது அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com 98410 53881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|