பதிவு செய்த நாள்
21 ஜூன்2021
02:22
‘ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் கம்பெனி’ ஷேர்ஸ் வைத்துள்ளேன். என் மறதியால் தற்போது அது, ஐ.இ.பி.எப்., வசம் உள்ளது. அதை ‘ஆன்லைன்’ மூலமாக விண்ணப்பித்து பெறவேண்டுமாம். நேரடியாக அந்த அலுவலகத்தை தொடர்புகொள்ள விலாசம் தெரிவிப்பீர்களா?
முத்துராமன்,
சென்னை கே.கே.நகர்.
நேரடியாக தொடர்புகொள்வதற்கு எந்த விலாசமும் இல்லை. இதை ஆன்லைனில் தான் தற்போது செய்யமுடியும். ‘டிமேட்’ கணக்கை துவக்கி, அதன் பிறகு, ஐ.இ.பி.எப்., படிவத்தை நிரப்பி, வலையேற்றம் செய்ய வேண்டும். நல்ல ‘ஆடிட்டர்’ ஒருவரது உதவியை நாடுங்கள். அவர் வழிகாட்ட முடியும்.
‘பஜாஜ் பைனான்ஸ்’ நிறுவனத்தில், 5 ஆண்டுகளுக்கு முன், தவணை முறையில், ‘ஏசி’ வாங்கினேன். ஆண்டுதோறும் வாடிக்கையாளர்அட்டை கட்டணமாக 200 ரூபாயை எனது ஒப்புதல் இல்லாமல் பிடித்தம் செய்கின்றனர்.
டி.ஆனந்தசுப்ரமணியம், கோவை.
ஒப்புதல் இல்லாமல் என்று சொல்ல முடியாது. நீங்கள் கொடுத்த ஒப்புதலின் அடிப்படையில் தான், ‘இ.எம்.ஐ., நெட்வொர்க்’ அட்டைக்கான, 117 ரூபாய் ஆண்டுக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. கடன் வாங்கும்போது பல்வேறு இடங்களில் கையெழுத்து போட்டு ஒப்புதல் கொடுத்திருப்பீர்கள். அதில் இதுவும் ஒன்று. இந்த அட்டையை ‘கேன்சல்’ செய்வதற்கு, ஒன்று, அவர்களுடைய வாடிக்கையாளர் சேவை மையத்தைக் கூப்பிட்டுச் சொல்லுங்கள்.அல்லது அருகில் உள்ள, ‘பஜாஜ்’ மையத்துக்கு சென்று, ஒரு கடிதத்தோடு இந்த அட்டையைக் கொடுத்துவிட்டு, பின்னர் wecard@bajajfinserv.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விபரம் தாருங்கள். ஒரு மாதத்தில் அட்டை கேன்சல் செய்யப்படும் என்று தெரிவிக்கிறது, பஜாஜ் பைனான்ஸ் வலைத்தளம்.
‘பி.எப்.டி., மியூச்சுவல் நிதி லிமிடெடில்’ 50 ஆயிரம் ரூபாயை 6 மாதத்துக்கு வைப்புநிதியாக செலுத்தி இருந்தேன். மாதாமாதம் வட்டி வந்தது. கடந்த மாதம் முதிர்வுற்ற நிலையில், நிதி நிறுவனத்துக்கு போனேன். பூட்டிஇருந்தது. தொலைபேசி வேலை செய்யவில்லை. என்ன செய்வது?
ஆர்.சொர்ணாம்பாள், கோவை.
உங்களுக்கு யார் ஆலோசனை சொன்னார்களோ? அதிக வட்டிக்கு ஆசைப்பட்டால், பெருநஷ்டமே ஏற்படும் என, மீண்டும்மீண்டும் இந்தப் பகுதியில் சொல்லி வருகிறேன். நீங்கள் குறிப்பிடும் நிறுவனத்தின் நிர்வாகிகள், 2020 ஜூன் மாதம் பணமோசடிக்காக கைது செய்யப்பட்ட செய்தி, நாளிதழ்களில் வெளியாகியுள்ளது. நீங்கள்காவல்துறைக்கு போவதைத் தவிர வேறு வழி இல்லை.
என் கிரெடிட் கார்டு, ‘ஓவர் டியூ’வாகி, கார்டு, ‘ப்ளாக்’ ஆகிவிட்டது. பிப்ரவரியில் கொடுக்கப் பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி 2 தவணை கட்டினேன். இன்னும் ஒரு தவணை உள்ளது. கொரோனா வேலையின்மையால் கட்ட இயலவில்லை. வேலை துவங்கியதும் கட்டி விடுவேன். இதனால், ‘சிபில் ஸ்கோர்’ பாதிக்குமா?
தங்கராசு, கோவை.
பாதிக்கும். ஆனால் கடன் கிடைக்காமல் போகாது. வட்டி விகிதம் மற்றவர்களுக்கு கொடுக்கப்படுவதை விட, உங்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். கடன் தொகையும் அதிகமாக கிடைக்காது. உங்கள், ‘சிபில் ஸ்கோர்’ அறிக்கையை எடுத்து வைத்துக்கொண்டு ஆராயுங்கள். ஸ்கோரை உயர்த்திக்கொள்ளும் வழியைத் தேடுங்கள்.
வங்கியில், 2 ஆண்டுகளாக, ஒவ்வொரு மாதமும், ‘மினிமம் பேலன்ஸ்’ என்ற பெயரால் 300 ரூபாய் எடுக்கப்படுகிறது. பிடித்த தொகையை திருப்பிக் கேட்கலாமா?
சேது, மின்னஞ்சல்.
உங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்பதால் தான் இந்த அபராதம். கணக்கைத் துவங்கும்போதே இதற்கு நீங்கள் ஒப்புதல் கொடுத்துள்ளீர்கள். அதனால், அபராதத் தொகையைத் திரும்பத் தர கோரமுடியாது. குறைந்த இருப்புத் தொகை கோரும் வேறு வங்கிக்கு உங்கள் கணக்கை மாற்றிக்கொள்ளுங்கள்.
வங்கி ஒன்றில் தனிநபர் கடனுக்கு அணுகிய போது, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யச் சொல்லி அறிவுறுத்தினர். ‘பிளம்பிங்’ தொழில் செய்து வரும் எனக்கு, அது பற்றிய தகவல்களை தந்து உதவுங்கள்.
ஆர்.பிரபாகரன், மின்னஞ்சல்.
நல்ல ஆடிட்டரை அணுகுங்கள். ‘பான்’ எண் எடுத்து, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வரவையும் செலவுகளையும் குறிப்பிட்டு, வருமான வரியை தாக்கல் செய்யுங்கள். அதன் பின்னர் வங்கிக் கடன் கோருவது சுலபமாக இருக்கும்.
அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பிரீமியத்துக்கு, ஜி.எஸ்.டி., போடுவது சரியா?
ப்ரியன், சென்னை.
மொத்த பிரீமியத்துக்கும் ஜி.எஸ்.டி., போடப்படவில்லை. பிரீமியத்தில், ‘ரிஸ்க் கவரேஜ்’ மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டு பகுதிகள் உண்டு. இதில், ‘ரிஸ்க் கவரேஜ்’ பகுதிக்கு மட்டும் தான், ஜி.எஸ்.டி., வரி; சேமிப்புக்கு அல்ல. மொத்த பிரீமியத்தில்ஜி.எஸ்.டி., வரி 3 சதவீத அளவுக்கு தான் இருக்கும். அஞ்சலகம் வழங்கும் சேவைக்கு ஒரு சிறுதொகை, வரியாகக் கொடுக்கக்கூடாதா?
கிரெடிட் கார்டை நான்காக உடைத்து, செலுத்த வேண்டிய தொகையையும் காசோலையாக வைத்து ஆகஸ்டு 2020ல் அனுப்பினேன். அவர்கள் இன்னமும் ‘பில்’ அனுப்பிய வண்ணமே உள்ளனர். என்ன செய்ய?
சுரேந்திரன், கோவை.
நமது ஊரில், ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பிப்பதோ, கடன் அல்லது பற்று அட்டையைப் பெறுவதோ சுலபம். வெளியேறுவது மிக மிகச் சிரமம். உங்கள் பணி முடிந்தது. அதற்கான ஆவணங்களைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, இ-மெயில் மற்றும் வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்,
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை 14
என்ற நமது அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|