பதிவு செய்த நாள்
01 செப்2021
20:17
புதுடில்லி:இந்திய டிஜிட்டல் கடன் சந்தை, இப்போது உலகளவிலான பெரும் நிறுவனங்களின் கண்களை கவர ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, ‘அமேசான், பேஸ்புக், கூகுள், ஷியோமி’ போன்ற பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த சந்தையில் ஆர்வம் காட்டுகின்றன.
இந்தியாவில் கொரோனா பரவலால், ‘ஆன்லைன்’ பணப் பரிமாற்றங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில், இந்திய டிஜிட்டல் கடன் சந்தை, 73 லட்சம் கோடி ரூபாய் சந்தையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, இத்துறையில் கால்பதிக்க திட்டமிட்டு வருவதாக இந்நிறுவனங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளன.
இவை, இந்தியாவை சேர்ந்த சிறிய கடன் வழங்கும் நிறுவனங்கள் அல்லது சிறு வங்கிகளுடன் இணைந்து, அதன் வாயிலாக கால்பதிக்க உள்ளன.‘புளூம்பெர்க்’ நிறுவனம், இந்தியாவின் டிஜிட்டல் கடன் சந்தை, 2023ம் ஆண்டில், 25.55 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தையாக உயரும் என்றும்; அதற்கு அடுத்த ஆண்டில் இதுவே, 73 லட்சம் கோடி ரூபாய் சந்தையாக மாறும் என்றும் கணித்து அறிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம், அண்மையில் அதன் கூட்டு நிறுவனத்துடன் இணைந்து, சிறு வணிகங்களுக்கு 5 முதல் 50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. வட்டி 17 முதல் 20 சதவீதமாக இருக்கும்.
இதேபோல், ஷியோமி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மனு ஜெயினும், கடன், கிரெடிட் கார்டு, காப்பீட்டு திட்டங்களை நிறுவனம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அமேசான் நிறுவனம் அண்மையில் முதன் முதலாக, சொத்து மேலாண்மை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
நிதி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஸ்மால்கேஸ் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொண்டு இருக்கிறது.கூகுள் நிறுவனம் ஏற்கனவே அதன், ‘கூகுள் பே’ வாயிலாக டிஜிட்டல் தங்கம், மியூச்சுவல் பண்டு திட்டங்கள் ஆகியவற்றை வினியோகிக்க துவங்கி இருக்கிறது.
மிகப் பெரிய அளவிலான கடன்களை வழங்குவதை விட, டிஜிட்டல் வாயிலாக சிறு கடன்களை வழங்குவது மிகவும் லாபகரமாகவும், பாதுகாப்பானதாகவும், எளிதானதாகவும் இருக்கும் என இந்நிறுவனங்கள் கருதுகின்றன.
நாட்டின் வாராக்கடன் விகிதம் 11.3 சதவீதமாக மார்ச் மாதத்தில் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கிடையே ரிசர்வ் வங்கியும், ஆன்லைன் வாயிலாக கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கி உள்ளது.
இத்தகைய கடன் வழங்கும் நிறுவனங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அடக்கம். நாட்டில் கிட்டத்தட்ட 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஆன்லைன் வாயிலாக கடன்களை வழங்கி வருகின்றன.‘அமேசான், பேஸ்புக், கூகுள், ஷியோமி’ போன்ற பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்த சந்தையில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|