பதிவு செய்த நாள்
07 டிச2021
21:03
புதுடில்லி:வலைதளத்தில் புழங்கும் ‘கிரிப்டோகரன்சி’ எனும் மெய்நிகர்நாணய சந்தையை கண்காணிக்கும் பொறுப்பை, ‘செபி’யிடம் வழங்குவது குறித்து மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வலைதளங்களில் ‘பிட்காய்ன், எதிரியம்’ போன்ற மெய்நிகர் நாணயங்களில் ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர்.ரிசர்வ் வங்கி போல இந்த மெய்நிகர் நாணயங்களை கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை. அதனால், இச்சந்தை, சட்ட விரோத பணப் பரிமாற்றம், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி போன்ற சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுவதாக புகார் உள்ளது.
மெய்நிகர் கரன்சிகளை அங்கீகரிக்க மறுக்கும், ரிசர்வ் வங்கி, இந்தியாவுக்கென ‘டிஜிட்டல் கரன்சி’யை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.இதையடுத்து அனைத்து தனியார் மெய்நிகர் கரன்சிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவெடுத்து அதற்கான, வரைவு மசோதாவை தயாரித்துள்ளது.
அத்துடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பேசும் போது ‘‘பிட்காய்ன் போன்ற எந்தவொரு தனியார் மெய்நிகர் நாணயத்தையும் அரசு அங்கீகரிக்காது,’’ என்றார்.
இந்நிலையில், மெய்நிகர் நாணய சந்தைகள் வாயிலாக கிடைக்கும் வரி வருவாயை கருதி, அவற்றுக்கு தடை விதிக்கும் வரைவு மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய வரைவு மசோதாவில், ஏற்கனவே மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்துள்ளோர் பாதிக்காத வகையில் திருத்தங்கள் செய்யப்படும். நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்கள், மெய்நிகர் நாணயங்களில் செய்துள்ள முதலீடுகள் தொடர்பான விபரங்களை முழுமையாக வெளியிட ‘கெடு’ விதிக்கப்படும்;
அவர்களை புதிய விதிமுறைகளின் கீழ் கொண்டு வர வசதியாக, மசோதாவில் திருத்தங்கள் செய்யப்படும்.விதிமீறலுக்கு 20 கோடி ரூபாய் அபராதம் அல்லது ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
‘கிரிப்டோகரன்சி’ என்ற சொல், ‘கிரிப்டோஅசெட்ஸ்’ என, அதாவது நிதிச் சொத்துக்கள் ஆக மாற்றப்படும் என தெரிகிறது. நிதிச் சொத்துக்களில் சிறிய முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில், குறைந்தபட்ச முதலீடு தொடர்பான விதிமுறையை வரைவு மசோதாவில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய நிதிச் சொத்துக்களின் சந்தையை கண்காணிக்கும் பொறுப்பு, ‘செபி’ எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|