பதிவு செய்த நாள்
22 மே2022
02:03
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் விமான சேவைக்கு, சிவில் விமான போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து, இந்நிறுவன விமானங்கள், விரைவில் விண்ணில் பறக்க உள்ளன.ஆனாலும், நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது என்கிறார்கள் நிபுணர்கள்.
‘ஏர் இந்தியா’ நிறுவனம் ‘டாடா’ குழுமத்தின் கீழ் வந்து, பெரும் சவாலாக எழுந்துள்ளது. அத்துடன் ‘விஸ்டாரா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோ ஏர்’ என, பல போட்டி நிறுவனங்களை எதிர்கொள்ள வேண்டிஇருக்கும் என்கிறார்கள். மேலும் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக கொரோனா மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவையும் உள்ளன.ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கடனில் சிக்கியதை அடுத்து, திவால் நிலைக்கு சென்று, அதன் விமான சேவை நிறுத்தப்பட்டது.
நரேஷ் கோயலுக்கு சொந்தமான இந்த நிறுவனம், கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதிக்கு பின், தன்னுடைய விமான சேவையை நிறுத்திக் கொண்டது. இதனால், கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் பணியிழந்தனர்.இதன் பின், அண்மையில் இந்நிறுவனம் ‘ஜலான் கல்ராக்’ கூட்டமைப்பின் கைக்கு வந்தது.இதையடுத்து, விமான சேவையை துவக்கும் முயற்சியில் ஜலான் கல்ராக் இறங்கியது.
தற்போது, இந்நிறுவனத்தின் அனைத்து விமானங்களின் பாதுகாப்பு அம்சங்களும் உறுதி செய்யப்பட்டு, சேவையை தொடர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இந்நிறுவனம் வசம் தற்போது ஐந்து ‘போயிங் 777’ மற்றும் நான்கு ‘போயிங் 737’ விமானங்கள் உள்ளன.வரும் ஜூலை – செப்டம்பர் காலாண்டில், குறிப்பிட்ட சில விமானங்களை மட்டும் இயக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் பின், படிப்படியாக அனைத்து விமானங்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.சவால்களை சந்தித்து வெற்றி பெறுமா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|