பதிவு செய்த நாள்
09 மார்2011
01:26
புதுடில்லி:சென்ற பிப்ரவரி மாதத்தில் நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, 7.04 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட இரண்டுமடங்கிற்கு மேல் (3 லட்சத்து 29 ஆயிரத்து 448 டன்) அதிகமாகும் என, சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புண்ணாக்கு வகைகள், வெளிநாடுகளில் கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் மொத்த புண்ணாக்கு ஏற்றுமதியில், சோயா புண்ணாக்கின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சென்ற பிப்ரவரி மாதத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 5 லட்சத்து 40 ஆயிரத்து 360 டன்னாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, கடுகு புண்ணாக்கு (ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 655 டன்), ஆமணக்கு புண்ணாக்கு (13 ஆயிரத்து 110 டன்), கடலைப் புண்ணாக்கு (1,475 டன்) மற்றும் தவிட்டு புண்ணாக்கு (800 டன்) என்ற அளவிற்கு இருந்தது.நாட்டின் வட மாநிலங்களில், சோயா எண்ணெய்க்கு தேவை அதிகரித்ததையடுத்தும், இதற்கு நல்ல விலை கிடைத்ததையடுத்தும் இதன் உற்பத்தி அதிகரித்தது. இந்த நிலையில், வெளிநாடுகளில் சோயா புண்ணாக்கிற்கான தேவை உயர்ந்ததையடுத்து இதன் ஏற்றுமதி சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயல் இயக்குனர் பீ.வி. மேத்தா தெரிவித்தார்.நம் நாட்டிலிருந்து அதிகளவில் புண்ணாக்கு இறக்குமதி செய்து கொண்டதில், தென் கிழக்கு ஆசிய நாடுகள் (5.38 லட்சம் டன்) முதலிடத்தில் உள்ளன. இதனைத் தொடர்ந்து, மேற்காசிய நாடுகள் (1.11 லட்சம் ) மற்றும் ஐரோப்பிய நாடுகள் (53 ஆயிரத்து 605 டன்) உள்ளன.நடப்பு 2010-11ம் நிதியாண்டில், பிப்ரவரி மாதம் வரையிலுமாக நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி 44.91 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட 50 சதவீதம் (30 லட்சம் டன்) அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.வியட்நாம், தென்கொரியா, ஜப்பான்,சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள், நம் நாட்டிலிருந்து அதிகளவில் புண்ணாக்கு வகைகளை இறக்குமதி செய்து கொள்கின்றன. அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளுக்கும், நம் நாட்டிலிருந்து புண்ணாக்கு வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|