பதிவு செய்த நாள்
16 மார்2011
01:31
மும்பை:பொதுத்துறையைச் சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) அதன் பங்குதாரர்களுக்கு, உரிமைப் பங்குகளை வெளியிட்டு 20 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த உரிமை பங்கு வெளியீடு, வரும் 2011-12ம் நிதியாண்டின், முதல் காலாண்டில், இருக்கும் என தெரிகிறது. இவ்வங்கியின் தலைவர் ஓ.பி.பட், இதன் துணை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலாவின் 1,000 ஆவது கிளையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:பாரத ஸ்டேட் வங்கி, அதன் விரிவாக்க நடவடிக்கைகள் மற்றும் மூலதன தேவையை அதிகரித்து கொள்வதற்காக, உரிமை பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளது. தற்போது, இவ்வங்கியில், மத்திய அரசு 59 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. எனவே, மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு, இந்த வெளியீடு மேற்கொள்ளப்படும். உரிமை பங்குகள் வெளியிடும் நிலையில், அதிகளவு பங்கு மூலதனத்தை கொண்டுள்ள மத்திய அரசும், இப்பங்கு வெளியீட்டில் பங்கேற்க வேண்டும். அரசு அனுமதிக்கும் நிலையில், அதன் பங்கு மூலதன அளவு, தற்போதைய அளவிலேயே தொடரும்.இதற்கு முன்பாக, பாரத ஸ்டேட் வங்கி, கடந்த 2008ம் ஆண்டு உரிமை பங்கு வெளியீட்டின் மூலம், 16 ஆயிரத்து 736 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது. இதனையடுத்து அப்போது, வங்கியின் மூலதன இருப்பு விகிதம் 14 சதவீதமாக அதிகரித்திருந்தது.இவ்வங்கி, சென்ற மாதம் 2,000 கோடி ரூபாயை திரட்டிக் கொள்ளும் வகையில், கடன் பத்திர வெளியீட்டை மேற்கொண்டது. இக்கடன் பத்திரங்கள் வேண்டி, முதலீட்டார்களிடமிருந்து 8.5 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வங்கி, வரும் 2011-12ம் நிதியாண்டில், புதிதாக 5,000 பேரை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளது. இதற்கான பணிகள், வரும் நிதி ஆண்டின், மத்தியில் இருக்கும். இவ்வாறு பட் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|