பதிவு செய்த நாள்
17 மார்2011
12:24
திருப்பூர் : அட்டை பெட்டி தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருட்கள் விலை 35 சதவீதம் உயர்ந்துள்ளதால், பின்னலாடைகளை பேக்கிங் செய்யும் அட்டை பெட்டி தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய அட்டைப்பெட்டி உரிமையாளர்கள் சங்கம், 250க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டது; நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்கள் சங்கத்தை சாராமல் இயங்குகின்றன. இத்துறையில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தினமும் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள அட்டை பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.அட்டைப்பெட்டி தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளான 'கிராப்ட்' பேப்பர் பயன்படுத்தப்படுகிறது. கடந்தாண்டு ஜனவரியில் இருந்து ஏப்., வரை நான்கு முறை விலை உயர்ந்துள்ளது. அதன் பின், ஜூன் மாதத்தில் இரண்டு முறை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், மூலப்பொருட்கள் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இதனால், அட்டை பெட்டி தயாரிப்பு தொழில் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தொழில் நெருக்கடியை சமாளிக்க, கடந்தாண்டு ஜூன் மாதம் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்,அட்டைப்பெட்டி விலையில் 30 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதிக விலை கொடுத்தாலும், 'கிராப்ட்' பேப்பர் கிடைப்பதில்லை. இதனால், உற்பத்தி ஸ்தம்பித்துள்ளது.தற்போதைய நிலவரப்படி, பேப்பர் விலை 30 சதவீதம், தொழிலாளர்கள் சம்பளம் 50 சதவீதம், உபபொருட்கள் விலை 35 சதவீதம், டெலிவரி செலவு 25 சதவீதம் அளவுக்கு என மொத்த உற்பத்தியில் 35 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதனால், கடந்தகால விலை நிர்ணயத்தில் இருந்து 35 சதவீதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெட்டி செய்வதற்காக, பசைமாவு, ஸ்டிச்சிங் காயில், காலிகோ ரோல், மின்சாரம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால், தொழிலை நிறுத்த வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது.தென்னிந்திய அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சஞ்சித் கூறுகையில்,''தொழில் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டிய தருணம் உருவாகியுள்ளதால், சங்கத்தின் அவசர மகாசபை கூட்டம் இன்று நடக்கிறது. 'சைமா' சங்க வளாகத்தில் நடக்கும் அக்கூட்டத்தில், தொழில் நெருக்கடிக்கு தீர்வு காணக்கோரி, உற்பத்தி நிறுத்தம் செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும்,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|