பதிவு செய்த நாள்
19 மார்2011
01:21
புதுடில்லி:இந்தியாவில், மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்ற பிப்ரவரி மாதத்தில் மட்டும், ஜி.எஸ்.எம்., மொபைல் போன் சேவையில், புதிதாக ஒரு கோடியே 47 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இத்தொழில்நுட்பத்தில், இச்சேவையை பெறும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, பிப்ரவரி மாதம் வரையிலுமாக, 55 கோடியே 51 லட்சமாக உயர்ந்துள்ளது. உள்நாட்டில், மொபைல் போன் சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பத்தில் மொபைல் சேவையை வழங்கி வருகின்றன. ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்தில், சேவையை பெறும் வாடிக்கையாளர்கள், தங்களது மொபைல் போனில், எந்த ஒரு நிறுவனத்தின் 'சிம் கார்டை'யும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே சமயம், சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பத்தில், நிறுவனம் வழங்கும் மொபைல் போன் மற்றும் 'சிம் கார்டை' மட்டுமே பயன்படுத்தி, உபயோகிக்க முடியும்.சென்ற ஜனவரி மாதத்தில், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான மொபைல்போன் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 54 கோடியே 4 லட்சமாக இருந்தது. இதில், டாட்டா டெலி சர்வீசஸ் நிறுவனத்தின் டாட்டா டொகொமோ மற்றும் ரிலையன்ஸ் டெலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ஜி.எஸ்.எம்., மொபைல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. உள்நாட்டில், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப சேவையில், பார்த்தி ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. சென்ற பிப்ரவரி மாதத்தில், இந்நிறுவனத்தின் ஜி.எஸ்.எம்., மொபைல் போன் சேவையில், புதிதாக 32 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 15 கோடியே 90 லட்சமாக அதிகரித்துள்ளது. இத்தொழில்நுட்பத்தில், பிப்ரவரி மாதம் வரையிலுமாக, இதன் சந்தை பங்களிப்பு 28.65 சதவீதமாக உள்ளது.வோடபோன் எஸ்ஸார் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, சென்ற பிப்ரவரி மாதத்தில், கூடுதலாக 35 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு மாதத்தில், மிக அதிகளவில், வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 23.59 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஓர் அங்கமான, ஐடியா செல்லுலார், சென்ற பிப்ரவரி மாதத்தில், கூடுதலாக 25 லட்சத்து 10 ஆயிரம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை,8 கோடியே 68 லட்சமாக உயர்ந்துள்ளது.ஏர்செல் நிறுவனம், இம்மாதத்தில், கூடுதலாக 16 லட்சத்து 60 ஆயிரம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டது. இதன், ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 5 கோடியே 35 லட்சமாக அதிகரித்துள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகிய இரண்டு நிறுவனங்களுமாக, சென்ற பிப்ரவரி மாதத்தில், முறையே 15 லட்சம் மற்றும் 25 ஆயிரத்து 786 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளன. இவ்விரு நிறுவனங்களின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை முறையே, 8 கோடியே 51 லட்சம் மற்றும் 51 லட்சத்து 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது.நடப்பு 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில், ரிலையன்ஸ் டெலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 2 கோடியே 39 லட்சமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|