பதிவு செய்த நாள்
28 மார்2011
00:14
புதுடில்லி: பொதுத்துறையை சேர்ந்த என்.டி.பி.சி. - என்.எச்.பி.சி. மற்றும் சட்லெட்ஜ் ஜல் வித்யூத் நிகம் ஆகிய மூன்று நிறுவனங்களுமாக, வரும் 2011-12ம் நிதியாண்டில், மொத்தம் 26 ஆயிரத்து 40 கோடி யூனிட் மின்சாரம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன.இவற்றுள், என்.டி.பி.சி. நிறுவனம், வரும் நிதியாண்டில், 23 ஆயிரத்து 500 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், மத்திய மின்சார அமைச்சகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சென்ற நிதியாண்டில், இந்நிறுவனம், 22 ஆயிரத்து 600 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்திருந்தது.என்.டி.பி.சி. நிறுவனத்தின் மின்சார உற்பத்தி திறன், 33 ஆயிரத்து 694 மெகாவாட்டிற்கும் அதிகமாக உள்ளது. இந்நிறுவனம் வரும் நிதியாண்டில், சொந்தமாகவும், கூட்டுத் திட்டத்தின் வாயிலாகவும் கூடுதலாக, 4,320 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.என்.எச்.பி.சி. நிறுவனம், வரும் நிதியாண்டில், 1,850 கோடி யூனிட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்ற நிதியாண்டில் இந்நிறுவனம், 1,800 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்திருந்தது. இந்நிறுவனம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், 'யூரி - ஐஐ' என்ற திட்டத்தையும், இமாச்சல பிரதேசத்தில் 'சாம்ரா-ஐஐஐ' என்ற மின் திட்டத்தையும், வரும் நிதியாண்டில் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வதாக, மத்திய மின் அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.சட்லெட்ஜ் ஜல் வித்யூத் நிகம் (எஸ்.ஜே.வி.என்.எல்.) நிறுவனம், வரும் நிதியாண்டில், 690 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக, 1,718 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என மதிப்பிட்டுள்ளது.மேலும், இந்நிறுவனம், இமாச்சலப் பிரதேசத்தில் நாத்பா, ஜாக்ரி நீர்மின் திட்டத்தின் வாயிலாக, 1,500 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இது தவிர, ராம்பூரில் 412 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், மின் திட்டம் ஒன்றை அமைத்து வருகிறது. இத்திட்டம் 2013ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.ஜே.வி.என்.எல். நிறுவனம், இமாச்சல பிரதேசத்தில், லுகிரி என்ற இடத்தில், 775 மெகா வாட் மற்றும் தவுலசித் என்ற இடத்தில் 66 மெகா வாட் மின் உற்பத்தி திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. மேலும், உத்தரகண்ட் மாநிலத்தில், ஜாகோல் சங்கிரி என்ற இடத்தில், 51 மெகா வாட் மின் உற்பத்தி திட்டத்தையும் அமைத்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|