பதிவு செய்த நாள்
31 மார்2011
03:03
மும்பை:எல்.ஐ.சி. மியூச்சுவல் பண்டு நிறுவனம், ஜப்பான் நாட்டை சேர்ந்த நோமுரா அசட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் செயல்படும் வகையில், எல்.ஐ.சி. நோமுரா மியூச்சுவல் பண்டு அசட் மேனேஜ்மென்ட் கம்பெனி என்ற பெயரில், புதிய கூட்டு நிறுவனத்தை துவங்கியுள்ளது. இந்நிறுவனத்தில், நோமுரா 35 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இந்த கூட்டு நிறுவனத்திற்கான 'லோகோ'வை, மத்திய நிதி அமைச்சகத்தின் இணையமைச்சர் நமோநாராயண் மீனா துவக்கி வைத்தார். இப்புதிய நிறுவனம் குறித்து, எல்.ஐ.சி. நோமுரா அசட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் தலைவர், டி.எஸ்.விஜயன் கூறுகையில், 'இந்தியாவில் எல்.ஐ.சி. நிறுவனம் மிகவும் பிரபலமானது. இந்நிலையில், சர்வதேச அளவில் பரஸ்பர நிதி மற்றும் முதலீட்டு சந்தையில் முன்னணியில் உள்ள நோமுரா நிறுவனத்துடன் கூட்டு மேற்கொள்வதன் வாயிலாக, இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்க முடியும்.சர்வதேச அளவில், முதலீட்டு திட்டங்களில் அனுபவம் உள்ள நோமுரா நிறுவனத்தின் இக்கூட்டின் வாயிலாக, பல நன்மைகள் கிடைக்கும்' என்றார்.இதுகுறித்து நோமுரா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி தக்சுமி சிபாதா கூறுகையில், 'பரஸ்பர நிதி துறையில் முன்னணியில் உள்ள இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படும் போது, சிறந்த சாதனை புரிய முடியும். எல்.ஐ.சி. நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள இக்கூட்டு திட்டத்தின் வாயிலாக, எதிர்காலத்தில் இத்துறையில் முன்னணி நிறுவனமாக உருவெடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது' என்றார்.மும்பையில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும்எல்.ஐ.சி. மியூச்சுவல் பண்டு நிறுவனம், காலவரையற்ற 26 பரஸ்பர நிதி திட்டங்களை கையாண்டு வருகிறது. இந்தியாவில் 28 வட்டார அலுவலகங்களும், 93 வர்த்தக மையங்களும் உள்ளன.ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்படும் நோமுரா நிறுவனத்தில் உலகளவில், 27 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். சில்லறை, சொத்து நிர்வாகம், முதலீட்டு வங்கி சேவை என, பல்வேறு முதலீட்டு திட்டங்களை இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|