பதிவு செய்த நாள்
21 ஏப்2011
01:51
மும்பை:நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டின், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில், நுகர்பொருள் துறை நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி நன்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நுகர் பொருள் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளின் விலையை உயர்த்திய நிலையிலும், இவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், இக்காலாண்டில், இந்நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும், மூலப்பொருள்களின் விலை உயர்வால், இந்நிறுவனங் களின் லாப வரம்பு குறையக் கூடும் என்ற மதிப்பீடும் உள்ளது. நுகர்பொருள் துறையில், ஈடுபட்டு வரும் முன்னணி 8 நிறுவனங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நடப்பாண்டின் முதல் காலாண்டில், இந்நிறு வனங்களின் வருவாய், சென்ற ஆண்டின் இதே காலாண்டை விட 18.7 சதவீதம் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதே காலாண்டில், இவற்றின், நிகர லாபம் 13.7 சதவீதம் உயரும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இருப்பினும், மூலப் பொருள்களின் விலை உயர்வால், ஆண்டு கணக்கில் ஒப்பிடும் போது, இந் நிறுவனங்களின் லாப வரம்பு 70 புள்ளிகள் குறைந்து, 15 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என தெரிகிறது. நுகர்பொருள் துறை நிறுவனங்களின், ஒட்டுமொத்த விற்றுமுதலில், மூலப்பொருள்களுக்கான செலவினம் 40-50 சதவீதம் என்ற அளவில் உள்ளது. எனவே, இவற்றின் வருவாய் அதிகரித்ததாலும், லாப வரம்பு வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாரிக்கோ, தாபர் மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள், மூலப்பொருள்களின் விலை உயர்வை எதிர்கொள்ளும் வகையில், குறிப்பிட்ட சில தயாரிப்பு பொருள்களின் விலையை உயர்த்தின. இருப்பினும், சில நிறுவனங்கள், இத்துறையில் நிலவும் கடுமையான போட்டியால், மூலப்பொருள்களின் விலை உயர்வுக்கு ஏற்ப, தயாரிப்பு பொருள்களின் விலையை அதிகரிக்க இயலாத சூழ்நிலையும் உள்ளது.மூலப்பொருள்களின் விலை உயர்வு மற்றும் போட்டி ஒருபுறமிருக்க, பல புதிய நிறுவனங்களின் வருகையும், இத்துறை நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வரம்பை பாதிப்பதாக உள்ளது. எனவே, நுகர்பொருள் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், அவற்றின் லாப வரம்பு வளர்ச்சிக்கு, முக்கியத்துவம் அளிப்பதை விட, விற்பனையை அதிகரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றன. நுகர்பொருள் துறையில், முன்னணியில் உள்ள இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐ.டி.சி. ஆகிய நிறுவனங்கள், சிறிய நிறுவனங்களின் போட்டியை எதிர்கொண்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, மேற்கண்ட இவ்விரு நிறுவனங்களும், விளம்பரம் மற்றும் சந்தைப் படுத்துதல் வாயிலாக, அவற்றின் தயாரிப்பு களை சிறந்த முறையில், விற்பனை செய்து வருகின்றன. இந்துஸ் தான் யூனிலீவர் நிறுவனத்தின் வருவாய், நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டில், 15 சதவீத அளவிற்கு வளர்ச்சி காணும் என்றாலும், இக்காலா ண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாப வளர்ச்சி 3 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படு கிறது.புகையிலை, நுகர்பொருள்கள், ஓட்டல் நடவடிக்கைகள் என பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வரும், ஐ.டி.சி. நிறுவனத்தின் வருவாய், இக்காலாண்டில் 26 சதவீதம் என்ற அளவிலும், விற்றுமுதல் 17 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.அண்மை காலமாக, குறிப்பிட்ட சில மூலப் பொருள்களின் விலை குறைந்துள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வு இடர்பாடு அளிப்பதாகவே உள்ளது. நுகர்பொருள் துறை நிறுவனங்கள், போட்டிகளை எதிர்கொண்டு, விற்பனையை அதிகரித்து, சந்தை பங்களிப்பை தொடர்ந்து, தக்க வைத்து கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதிக விளம்பர செலவினங்களும், இந்நிறுவனங்களின் லாப வரம்பு குறைவதற்கு காரணமாக உள்ளது என ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|