பதிவு செய்த நாள்
06 மே2011
00:07
சேலம்: சட்டசபை தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி, பயிர்க்கடன் வழங்குவது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 23 மத்திய கூட்டுறவு வங்கிகளின் கட்டுப்பாட்டில், 4,522 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றன. இந்த வங்கிகள் மூலம், விவசாயிகளுக்கு பயிர்க்கடன், விவசாய நகைக்கடன், தானிய ஈட்டுக்கடன் வழங்கப்படுகிறது. தவிர, மகளிர் சிறு வணிகக்கடன், வாகன கடன், வீட்டு அடமான கடன், கூட்டு பொறுப்புக்குழு கடன் என, 20 வகையான கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கடந்த 2006ல், விவசாயக்கடன் மற்றும் வட்டித்தொகை, 3.796 கோடி ரூபாய்தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், 9 சதவீதமாக இருந்த விவசாய கடன் வட்டி, 7 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, தவணை தவறாமல் திரும்பச் செலுத்தும் கடனுக்கு, 2 சதவீத வட்டி குறைப்பு என, விவசாயிகளுக்கு அடுத்தடுத்து சலுகைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், விவசாயிகளுக்கு வட்டியில்லா ஓராண்டு குறுகிய கால கடன் திட்டம், 2009 ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. ஒரு விவசாயிக்கு குறைந்தது, 10 ஆயிரம் முதல் அதிக பட்சம், ஒரு லட்ச ரூபாய் வரை, கடனுதவி மற்றும் தேவையான உரம் வழங்கப்பட்டது.அதேபோல, வட்டியில்லா விவசாய நகைக்கடன், கூட்டு பொறுப்புக்குழு கடன் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக, சென்ற பிப்ரவரி மாதம் 15ம் தேதி முடிய, விவசாய கடன், 2,453.40 கோடி ரூபாயாக அதிகரித்தது.மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நன்னடத்தை விதிகளும் அமலானது. அதனால், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.ஓட்டுப்பதிவு முடிந்த பிறகும், தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, தொடக்க வேளாண் வங்கிகளில், விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுக்கப்பட்டு வருகிறது. வட்டியில்லா கடன் பெற்ற விவசாயிகளில், 90 சதவீதம் பேர், தவணை தவறாமல் கடனை திரும்ப செலுத்தி விட்டனர். மீண்டும் கடன் வழங்க தேர்வு செய்து, நான்கு மாதமாகியும் இதுவரை கடன் தராமல் இழுத்தடிப்பு செய்வதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.தற்போது, பெய்த கோடை மழை மக்காசோளம், ராகி, சோளம் உள்ளிட்ட மானாவரி பயிர்கள், துவரை, உளுந்து உள்ளிட்ட ஊடுபயிர்கள் செய்ய ஏதுவாக உள்ளது. தவிர, மஞ்சள் பயிரிடவும் ஏற்ற தருணமாக உள்ளது. தொடக்க வேளாண் வங்கிகள் கடன் தர மறுப்பதால், விவசாயிகள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். இயற்கை கை கொடுத்தும், போதிய முதலீடு இல்லாமல் விவசாயப் பணிகள் முடங்கி விட்டதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.தொடக்க வேளாண் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மத்திய கூட்டுறவு வங்கி கடன் தர மறுப்பதால், விவசாயிகளுக்கு கடன் வழங்குவது, நான்கு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பதிவாளரை கேட்டால், 'தேர்தல் முடிவுக்குப் பின் பார்த்துக் கொள்ளலாம்' என்கிறார். எனவே, விவசாயிகளுக்கு கடன் வழங்க முடியாத நிலையில், தொடக்க வேளாண் வங்கிகள் செயலிழந்துள்ளன' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|