பதிவு செய்த நாள்
13 மே2011
00:15
கொச்சி: சென்ற ஏப்ரல் மாதத்தில், ரப்பர் உற்பத்தி, 56 ஆயிரத்து 800 டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இருந்த உற்பத்தியை விட, 6.2 சதவீதம் (53 ஆயிரத்து 500 டன்) அதிகம். சென்ற ஏப்ரல் மாதத்தில், ரப்பர் மரங்கள் அதிகமுள்ள பகுதிகளில் பெய்த மழையால், ரப்பர் உற்பத்தி அதிகரித்துள்ளது என, ரப்பர் வாரியத்தின் உயரதிகாரி தெரிவித்தார். இதே மாதங்களில், ரப்பர் பயன்பாடு, தற்காலிக புள்ளி விவரத்தின் படி, 78 ஆயிரத்து 250 டன் என்ற அளவிலிருந்து, 82 ஆயிரத்து 500 டன்னாக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டு, ஏப்ரல் மாத இறுதி நிலவரப்படி, ரப்பர் கையிருப்பு, 1 லட்சத்து 96 ஆயிரத்து 15 டன்னாக இருந்தது. இது, நடப்பாண்டு ஏப்ரல் மாத இறுதியில், 2 லட்சத்து 50 ஆயிரத்து 250 டன்னாக உயர்ந்திருந்தது. கடந்த 2010-11ம் நிதியாண்டு இறுதியில், ரப்பர் கையிருப்பு, 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 டன்னாக இருந்தது.உள்நாடு மற்றும் சர்வதேச அளவில், இயற்கை ரப்பரின் விலை, பன் மடங்கு அதிகரித்துள்ளது. இது, ரப்பர் விவசாயிகளுக்கு அதிக ஆதாயம் அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், ரப்பர் அதிகளவில் உற்பத்தியாகும் கேரளாவில், ரப்பர் பால் வடிப்பிற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால், ரப்பர் சாகுபடியில் ஈடுபட்டு வரும் பல குடும்பங்கள், ரப்பர் பால் வடிப்பை நிறுத்தியிருந்தன. ஆனால், தற்போது இதற்கு நல்ல விலை கிடைப்பதால், குடும்ப உறுப்பினர்களே ரப்பர் பால் வடிப்பில் களம் இறங்கியுள்ளனர் என, விவசாயி ஒருவர் தெரிவித்தார்.கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் ரப்பர் உற்பத்தி, 8 லட்சத்து 61 ஆயிரத்து 950 டன்னாக இருந்தது. அதேசமயம், இவ்வாண்டில் ரப்பர் பயன்பாடு, 9 லட்சத்து 49 ஆயிரத்து 205 டன்னாக இருந்தது. நடப்பாண்டில், ரப்பர் பால் வடிப்பு அதிகரித்துள்ளதால், இவ்வாண்டில் ரப்பர் உற்பத்தி, 9 லட்சத்து 2 ஆயிரம் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.ரப்பர் உற்பத்தி அதிகரித்து வரும் அதே நேரத்தில், ரப்பர் பயன்பாடும் உயர்ந்து வருகிறது. தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, ரப்பர் உற்பத்தி இல்லாததால், நம் நாடு ரப்பரை இறக்குமதி செய்து வருகிறது. இருப்பினும், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ரப்பர் இறக்குமதி, 1 லட்சத்து 20 ஆயிரம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.அதேசமயம், சென்ற 2010- 11ம் நிதியாண்டில், ரப்பர் இறக்குமதி, 1 லட்சத்து 77 ஆயிரத்து 637 டன்னாக இருந்தது. சென்ற 2010ம் ஆண்டு ஏப்ரலில் ரப்பர் இறக்குமதி, 10 ஆயிரத்து 876 டன்னாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.இதே மாதங்களில் ரப்பர் ஏற்றுமதி, 2,227 டன்னிலிருந்து 1,043 டன்னாக குறைந்துள்ளது. சென்ற 2010 -11ம் நிதியாண்டில், நாட்டின் ரப்பர் ஏற்றுமதி, 29 ஆயிரத்து 851 டன்னாக இருந்தது. இது, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 50 ஆயிரம் டன்னாக உயரும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|