பதிவு செய்த நாள்
07 ஜூன்2011
00:29
குன்னூர்:குன்னூரில் ஒரு கிலோ பசுந்தேயிலை 6 ரூபாய்க்கு ஏலம் போனது.நீலகிரியில் தேயிலை விலை கடந்த 10 ஆண்டுக்கு முன், கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. தேயிலை வர்த்தகத்தில் ஏற்பட்ட மந்த நிலையால், தேயிலை தூள் உற்பத்திக்கு, சிறு விவசாயிகள் வழங்கிய பசுந்தேயிலை கிலோ 2 முதல் 4 ரூபாய்வரை விலை கிடைத்தது. பின், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம், நீலகிரி தேயிலையின் தரம் உயர்வு உள்ளிட்ட சில காரணத்தால், நீலகிரி தேயிலை தொழில் மீண்டும் சூடுபிடித்தது. அதன் பின் பசுந்தேயிலைக்கு கிலோவுக்கு 15 ரூபாய் வரை விலை கிடைத்தது. ஆறுதலடைந்த விவசாயிகள் விவசாயத்தை தொடர்ந்தனர். கடந்த சில மாதங்களாக தேயிலை வர்த்தகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றம், பசுந்தேயிலை விலையில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி தேயிலைக்கு உள்நாட்டு சந்தையில் கிராக்கி இல்லாததால், குன்னூர் தேயிலை ஏலத்தில் வாரந்தோறும் தேயிலை தூள் தேக்கமடைகிறது. தேயிலை ஏலத்தில் விற்கப்படும், தேயிலை தூளின் விலையை அடிப்படையாக வைத்தே விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலைக்கு, தொழிற்சாலைகள் விலை நிர்ணயம் செய்கின்றன. அதன் அடிப்படையில், கடந்த சில வாரங்களாக, நடந்த ஏலத்தில் ஒரு கிலோ தேயிலை தூளின் சராசரி விலை 45 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. ஆனால், இந்த வாரம் நடந்த ஏலத்தில் தேயிலை தூள் 39 ரூபாய் ஆக குறைந்தது. இதனால், பசுந்தேயிலையின் விலையும் சரிவடைந்தது.குன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில், இந்த வாரம், ஒரு கிலோ சாதாரண ரக பசுந்தேயிலை விலை 6.25 முதல் 6.45 ரூபாயாக இருந்தது. சிறந்த ரக தேயிலையின் விலை 12 ரூபாய்க்கும், முதல் தர பசுந்தேயிலை 16 ரூபாய்க்கும் ஏலம் போனது. பெரும்பாலான விவசாயிகள் சாதாரண ரக பசுந்தேயிலையை மட்டுமே வழங்குவதால், மிக குறைந்த விலையை பெற்றுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|