பதிவு செய்த நாள்
25 ஜூலை2011
04:19
சேலம்:ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சேலம் பட்டு வேட்டி, சேலைகளுக்கு, கேரளாவில் மவுசு அதிகரித்து, உற்பத்தி சுறுசுறுப்பு அடைந்துள்ளது.கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை, வரும் செப்டம்பர் 9ம் தேதி கொண்டா டப்பட உள்ளது. இப்பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே, கேரள மாநிலம் விழாக்கோலம் காண்பது வழக்கம். அத்துடன், பண்டிகையின் போது மக்கள் அணியும் பட்டு சேலை, பட்டு வேட்டி ஆகியவற்றின் விற்பனை அதிக அளவில் நடக்கும்.இதற்காக அங்குள்ள முன்னணி ஜவுளி நிறுவனங்கள், வியாபாரிகள், பட்டு ரகங்களுக்கு, ஆர்டர் கொடுக்க துவங்கி விடுவர். ஓணம் பண்டிகைக்கு இன்னும், 55 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில், குறிப்பாக சேலம் மாவட்டத்தின் பட்டுக்கு அதிகளவில், கேரள வியாபாரிகள் ஆர்டர் கொடுக்க துவங்கி உள்ளனர். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்கு செல்லும் பட்டு அதிகரித்துள்ளதால், சேலத்தில் பட்டு உற்பத்தியில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள் ளது. சேலத்தில், அம்மாப்பேட்டை, பொன்னம்மா பேட்டை ஆகிய இடங்களில் பட்டு வேட்டிக ளும், கொண்டலாம் பட்டி, இளம்பிள்ளை, அமரகுந்தி, நங்கவள்ளி, மேச்சேரி, ஜலகண்டாபுரம், தாரமங்கலம், மேட்டூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆகிய இடங்களில், கைத்தறி மற்றும் விசைத்தறியில் பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.கேரள மாநிலத்தின் கொச்சி, திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு உட்பட மாநிலம் முழுவதும், சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பப்படும், பட்டு வேட்டி, சேலைகளின் விற்பனை, தற்போது சூடுபிடிக்கத் துவங்கியுள் ளது.கேரளாவில் விற்பனை அதிகரித்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, கடந்த சில வாரங்களாக இங்கிருந்து அனுப்பப்படும் பட்டு வேட்டி மற்றும் சேலைகளின் அளவும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை சேலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 10 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டு வேட்டிகள் மற்றும் சேலைகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.இந்த வேட்டிகளில் அமைக்கப்படும் ஜரிகை பார்டரின் அளவை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெள்ளியின் விலையில் பல மடங்கு உயர்வு ஏற்பட்டுள்ளதன் எதிரொலியாக, பட்டு வேட்டிகள், சேலைகளின் விலையிலும் நடப்பாண்டில் வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, பட்டு வேட்டிகள் 1,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரையும், பட்டு சேலைகள், 900 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதே ரக பட்டு வேட்டிகளின் தற்போதைய குறைந்த பட்ச விலை, 1,500 ரூபாயாகவும், சேலைகளின் குறைந்த பட்ச விலை, 1,200 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக, 22 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.சந்தன கலர், பாதாம்கீர் கலர் மற்றும் வெள்ளை கலர்களில் உள்ள பட்டு வேட்டிகளில் டைமண்ட், மயில் கண், ஆர்டின் ஆகிய டிஸைன்களை கொண்ட ஜரிகைகள் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில், திருமண சீசன் துவங்க இன்னும் ஒரு மாதமே இருப்பதால், தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து, பட்டு வேட்டி மற்றும் சேலைகளுக்கு தற்போது ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.கேரளாவிலும், தமிழகத்திலும் பட்டு வேட்டி, சேலைக்கு மவுசு அதிகரித்துள்ளது. அதனால், சேலத்தில் இவற்றின் உற்பத்தியில் சுறுசுறுப்பு அடைந்துள்ளது. இது, உற்பத்தியில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|