பதிவு செய்த நாள்
26 ஜூலை2011
03:16
சென்னை:கடந்த 10 ஆண்டுகளில், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலில் இடம் பெற்றிருந்த, 2,800 நிறுவனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், இந்நிறுவனப் பங்குகளில் முதலீட்டாளர்களின் கோடிக்கணக்கான ரூபாய், முடங்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2001ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு தொடக்கம் வரையிலான, 10 ஆண்டுகாலத்தில், 786 நிறுவனங்கள், மும்பை பங்குச் சந்தை பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதே காலத்தில், 2,800 நிறுவனங்கள், இப்பங்குச் சந்தை பட்டியலில் இருந்து, பல்வேறு காரணங் களுக்காக வெளியேறியுள்ளன. ஒரு நிறுவனம், பொதுமக்களிடம் உள்ள அதன் பங்குகளை திரும்ப வாங்குவதன் வாயிலாக, பங்குச் சந்தை பட்டியலில் இருந்து தன் விருப்பத்தின் பேரில் வெளியேறலாம். ஒரு சில நிறுவனங்கள், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி' யின் விதிமுறைகளை பின்பற்றாத காரணங்களால், சில காலத்திற்கு அந்த பங்குகளின் மீதான வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்படலாம்.ஒரு நிறுவனம் தொடர்ந்து இழப்பை சந்தித்து வந்தாலோ அல்லது அந்நிறுவனப் பங்குகள் மீது நீண்ட காலமாக வர்த்தகம் நடைபெறாமல் இருந்தாலோ, அப்பங்குகள் பங்குச் சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்படலாம். இது தவிர, பல்வேறு முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டாலும், ஒரு நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்படலாம்.இவ்வகையில், கடந்த 10 ஆண்டுகளில், 1,640 நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தை பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,196 நிறுவனப் பங்குகள் மீதான வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காரணங்களுக்காக, 876 நிறுவனங்கள், பங்குச் சந்தை பட்டியலில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டுள்ளன. பங்குச் சந்தை பட்டியலில் இருந்து விலக்கப்பட்ட நிறுவனங்களில், 53 சதவீத நிறுவனங்கள், மும்பை பங்குச் சந்தையின் அதிரடி நடவடிக்கையால் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.இத்தகைய காரணங்களால், புகழ்பெற்ற பல நிறுவனங்கள், தற்போது இருந்த இடம் தெரியாமல் போயுள்ளன. உதாரணமாக, டீ.எஸ்.க்யூ சாப்ட்வேர், பென்டாபோர், பிரமிட் சாய்மீரா தியேட்டர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள், இப்போது மும்பை பங்குச் சந்தை பட்டியலில் இல்லை. இப்பங்குகள் மீதான வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தான் இதற்கு காரணம்.திரைப்படத் தயாரிப்பு மற்றும் வினியோகத்தில் ஈடுபட்டு வந்த பிரமிட் சாய்மீரா தியேட்டர்ஸ் நிறுவனம், கடந்த 2006ம் ஆண்டு, மிகப்பெரிய அளவிலான விளம்பரங்களுடன், புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டு, பல கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொண்டது. இப்பங்குகள் வேண்டி, 15 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்தன. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு, பல மடங்கு விலை உயர்ந்தது. ஆனால், ஒரு சில ஆண்டுகளில், பங்கு விலை அதள பாதாளத்திற்கு சென்றது. ஏராளமான முதலீட்டாளர்களின் பணம் முடங்கிப் போனது.பங்குச் சந்தையின் நடவடிக்கையால் நீக்கப்பட்ட புகழ்பெற்ற நிறுவனங்களுள், பெம்நார் மினரல்ஸ், லாயிட் சிமென்ட்ஸ், வெஸ்டர்ன் பேக்ஸ், சி.ஆர்.பி கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 'செபி'யின் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள், பங்குச் சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன. ஒரு நிறுவனம் பெரும் இழப்பை கண்டு, அதன் சொத்து மதிப்பு வீழ்ச்சி கண்டாலோ, 6 மாதங்களுக்கு மேல் பங்கு வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலோ, விதிமீறல் தொடர்பாக நிறுவனம், நிறுவனர்கள், இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலோ, பங்கு உரிமை குறைந்தபட்ச அளவை விட குறைந்திருந்தாலோ, அத்தகைய நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன.விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால், டீ.எஸ்.க்யூ சாப்ட்வேர், பெண்டபோர் புராடெக்ட்ஸ் மற்றும் பிரமிட் சாய்மீரா நிறுவனங்கள், பங்குச் சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பெண்டகன் குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனம், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கான கட்டணத்தை செலுத்தத் தவறியதால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.பங்குச் சந்தை பட்டியலில் இருந்து, ஒரு நிறுவனத்தின் பங்குகளை நீக்குவதற்கு முன்பாக, அந்நிறுவனத்திடம் தன்னிலை விளக்கம் கோரி, பங்குச் சந்தை நிறுவனம் கடிதம் அனுப்பும். இதையடுத்து, பங்கு வர்த்தகத்தின் மீதான தடை நீக்கப்பட்டால், முதலீட்டாளர்கள், பங்குகளை விற்று வெளியேற வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறின்றி, நிறுவனர் வெளிச்சந்தையில் பங்குகளை வாங்குவதாக அறிவிக்கும் பட்சத்தில், பங்குச் சந்தை பட்டியலில் இருந்து பங்குகளை நீக்குவது தொடர்பாக, பங்குச் சந்தை நிறுவனத்தின் கடிதம் கிடைக்கும் வரை முதலீட்டாளர்கள் காத்திருக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|