பதிவு செய்த நாள்
30 ஜூலை2011
00:03
சென்னை: சென்னையில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி, சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 406.90 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டை விட, 10.5 சதவீதம் (368.20 கோடி ரூபாய்) அதிகமாகும். இதே காலாண்டுகளில், வங்கியின் மொத்த வர்த்தகம், 21.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 59 ஆயிரத்து 27 கோடியிலிருந்து, 1 லட்சத்து 92 ஆயிரத்து 934 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், திரட்டப்பட்ட டெபாசிட் 21.4 சதவீதம் உயர்ந்து 91 ஆயிரம் கோடியிலிருந்து, 1 லட்சத்து 10 ஆயிரத்து 425 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வழங்கப்பட்ட கடன்கள் 21.3 சதவீதம் அதிகரித்து, 82 ஆயிரத்து 510 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.எம்.பாசின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதே காலாண்டுகளில், வங்கியின் மொத்த வருவாய் 22.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,030.70 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர வட்டி வருவாய், 13.9 சதவீதம் உயர்ந்து 1,030 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வங்கியின் நிகர வசூலாகாத கடன் 0.76 சதவீதத்திலிருந்து, 0.51 சதவீதமாக குறைந்துள்ளது.வங்கி முன்னுரிமை துறைகளுக்காக வழங்கப்பட்ட கடன் 14.5 சதவீதம் உயர்ந்து, 27 ஆயிரத்து 098 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு முழு நிதியாண்டில், வேளாண்துறைக்கு 8,300 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 3,153 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 30ம் தேதி வரையிலுமாக, 1,89,596 மாணவர்களுக்கு 3,000 கோடி ரூபாய் அளவிற்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் வங்கி, எஸ்.பீ.ஐ. மியூச்சுவல் பண்ட் நிறுவனத்துடன் பரஸ்பர நிதி திட்டங்களை வினியோகிப்பதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது என, பாசின் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|