பதிவு செய்த நாள்
30 ஜூலை2011
09:27
சென்னை : மிகச் சரியாக 20 ஆண்டுகளுக்கு முன், 400 கோடி ரூபாயாக இருந்த பத்திரப்பதிவுத் துறையின் வருவாய், கடந்த ஆண்டு, 5020 கோடி ரூபாய் என்ற மிகப் பெரிய இலக்கை எட்டியுள்ளது. வருவாயில், 12 மடங்கு உயர்ந்துள்ள பத்திரப்பதிவுகள், எண்ணிக்கையில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை, நிலம் வாங்குவது, விவசாயத்துக்கு மட்டுமாகவே இருந்தது. மனை வாங்குவது, லட்சாதிபதிகள் மட்டுமே செய்யும் காரியமாக இருந்தது. ஒருவேளை, சாமானியர்கள் வாங்கினால், தங்கள் வாழ்நாளெல்லாம் சேர்த்த சொத்தை, மொத்தமாக விழுங்கியதாக இருக்கும். அதன் அடையாளமாக, வீட்டின் உள்ளே சிமென்ட் பூசியிருக்கும்; வெளியே செங்கல் சிரிக்கும். கடந்த, 1999 வரை வரை நிலைமை அவ்வாறே இருந்தது. 1999-2000வது ஆண்டு, தமிழகத்தில் புரட்சி வெடித்ததைப் போல, 15 லட்சத்து, 3 ஆயிரத்து, 181 பத்திரப்பதிவுகள் மூலம், 1094 கோடி ரூபாய், அரசுக்கு வருவாய் கிடைத்தது. அப்போது தான், நிலம் ஒரு நல்ல முதலீடு என்பதை மக்களும், பதிவுத்துறை நல்ல வருவாய் தரும் என்பதை அரசும், கண்டுகொண்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில், பத்திரங்களின் பதிவும், அரசின் வருவாயும் ஏறுமுகமாகவே இருந்தன. 2005-06ம் ஆண்டில், 20 லட்சத்து, 11 ஆயிரத்து, 566 பதிவுகள் மூலம், அரசு, 2,349 கோடி ரூபாய் வருவாய் இலக்கை அடைந்தது. 2006-07ல் 3,408 கோடி ரூபாய், 2007-08ல், 4,232 கோடி ரூபாய் என, 'ஜெட்' வேகத்தில் அரசின் வருவாய், ஆயிரம் கோடிகளைக் கடந்தது. இப்படி வெறிபிடித்தாற் போல் நிலம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, இரண்டு, மூன்று நிலம் வாங்கியவர்கள் கூட, தரகர்களாக மாறிய அதிசயம் நடந்தது. சலூன் கடைக்காரர்கள், சவரத்தை நிறுத்தினர். சலவைக்காரர்கள், துணிகளை மறுத்தனர். எல்லாரும் தரகு தொழிலில் இறங்கினர். திரும்பிய இடமெல்லாம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் தான். அவர்களின் உழைப்பு வீண் போகவில்லை. கடந்த ஆண்டில் மட்டும், வரலாற்றுச் சாதனையாக, 32 லட்சத்து, 80 ஆயிரத்து, 503 பதிவுகள் மூலம், அரசுக்கு, 5,020 கோடி ரூபாய் என்ற இமாலய வருவாய் கிடைத்தது. இதற்கு முந்தைய ஆண்டை விட இது 31 சதவீதம் கூடுதல். இந்த வேகத்தைப் பார்த்து தான், தமிழக முதல்வர் ஜெயலலிதா, 10 ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கை நிர்ணயித்து, பத்திரப்பதிவு அதிகாரிகளை விரட்டிக் கொண்டிருக்கிறார். வரலாற்றுப் பின்னணி இருக்கிறதோ, எதேச்சையாக நடந்து வரும் விஷயமோ, தெரியாது... ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போதெல்லாம், பத்திரப் பதிவுகளும், அரசுக்கு வருவாயும் அதிகரித்து தான் வந்திருக்கின்றன. கடந்த 1991ல் இருந்து, 96 வரையிலான ஐந்து ஆண்டுகளில், பத்திரப்பதிவின் சராசரி வளர்ச்சி வீதம் 13 சதவீதமாக இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகள், தி.மு.க., ஆட்சியின்போது, பத்திரப்பதிவு சராசரி, 8 சதவீதம் மட்டுமே. அடுத்து வந்த 2001-06 அ.தி.மு.க., ஆட்சியில், இது, 17 சதவீதமாக எகிறியது. கடந்த தி.மு.க., ஆட்சியில், 1 சதவீதம் மட்டும் அதிகரித்து, 18 சதவீதமாக இருந்தது. அதுவும், கடந்த ஆண்டு, 31 சதவீதம் வருவாய் அதிகரிப்பால் தான். இல்லாவிட்டால், சராசரி, 15 சதவீதமாகக் குறைந்திருக்கும். இப்போது, ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வரான முதல் காலாண்டிலேயே, 18.28 சதவீதம் பத்திரப்பதிவுகள் நடந்து, 1,349 கோடி ரூபாய், கஜானாவுக்குப் போய்விட்டது. சென்னை, 'நம்பர் ஒன்!' : பத்திரப் பதிவுத் துறையைப் பொறுத்தவரை, சென்னை, வேலூர், சேலம், கோவை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கடலூர் என, தமிழகம், ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல, கடந்த ஆண்டு பத்திரப்பதிவிலும், சென்னை மண்டலம் தான் முதலிடம் பிடித்தது. அங்கு மட்டும், 2,145 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு நடந்தது. கிட்டத்தட்ட, மொத்த வருவாயில் பாதி. இரண்டாமிடத்தில் கோவையும், மூன்றாமிடத்தில் மதுரையும் உள்ளன. கடைசி இடத்தில் தஞ்சாவூர் மண்டலம் உள்ளது. அங்கு கடந்த ஆண்டு, 181 கோடி ரூபாய் தான் வருவாய் கிடைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|