பதிவு செய்த நாள்
02 ஆக2011
15:13
புதுடில்லி: நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் நாட்டின் காபி ஏற்றுமதி, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 38 சதவீதம் அதிகரித்து 1.05 லட்சம் டன்னிலிருந்து 1.46 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. காபி ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள அமோக வளர்ச்சி குறித்து காபி வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, நடப்பு நிதி ஆண்டில் இதுவரை காபி ஏற்றுமதி அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. காபி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் பல நாடுகளில் உற்பத்தி குறைந்துள்ளது. இதனையடுத்து, சர்வதேச சந்தைகளில் காபி விலை மிகவும் உயர்ந்துள்ளது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, நிறுவனங்கள் காபியை அதிக அளவில் ஏற்றுமதி செய்துள்ளன என்று தெரிவித்தார். கடந்த நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் நம் நாட்டின் காபிக்கு சர்வதேச சந்தைகளில் சராசரியாக கிலோ ஒன்றுக்கு ரூ.97.90 கிடைத்தது. இது, 39 சதவீதம் அதிகரித்து நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ரூ.135.89 ஆக உயர்ந்துள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், அளவின் அடிப்படையில் ஏற்றுமதி 38 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், மதிப்பின் அடிப்படையில் இது 92 சதவீதம் அதிகரித்து ரூ.1,031 கோடியிலிருந்து ரூ.1,977 கோடியாக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் உயர்ந்து வரும் தேவைப்பாட்டை ஈடுகட்டும் வகையில் நம் நாட்டிலும் காபி உற்பத்தி அதிகரித்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் காபி உற்பத்தி 3.02 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, நடப்பு நிதி ஆண்டில் 7 சதவீதம் அதிகரித்து 3,22,250 டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு 2010-11ம் காபி பருவத்தின் முதல் 10 மாதங்களில் காபி ஏற்றுமதி அளவின் அடிப்படையில் 41 சதவீதம் அதிகரித்து 2,20,358 டன்னிலிருந்து 3,11,798 டன்னாக உயர்ந்துள்ளது.நம் நாட்டிலிருந்து இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், ரஷ்யா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு காபி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி அதிகரிப்பதால், நாட்டின் அன்னியச் செலாவணி வருவாய் உயர்ந்து, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|