பதிவு செய்த நாள்
17 ஆக2011
00:29
புதுடில்லி: மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற ஜூலை மாதத்தில், 9.22 சதவீதமாக சற்று குறைந்துள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில், 9.44 சதவீமாக இருந்தது. ஆகஸ்ட், ஜூன் மாதத்தை விட, ஜூலை மாதத்தில் 0.22 சதவீதம் குறைந்துள்ளது. நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது, மத்திய அரசுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, நாட்டின் பணப் புழக்கத்தை குறைக்கும் வகையில், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ரிசர்வ் வங்கி, இதுவரையிலுமாக, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, 11 முறை உயர்த்தியுள்ளது.கச்சா எண்ணெய் மற்றும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்ததால் பணவீக்கம் உயர்ந்துள்ளது. கடந்த மே மாதத்தில், நாட்டின் பொதுப் பணவீக்கம், 9.06 சதவீதம் என்ற அளவில் இருந்தது என, முன்பு மதிப்பிடப்பட்டிருந்தது. இது, மறுமதிப்பீட்டில், 9.56 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று, கடந்த ஏப்ரல் மாதத்திலும், முதலில் பொதுப் பணவீக்கம் 8.66 சதவீதமாகவும், மறுமதிப்பீட்டில் இது 9.74 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஜூலை மாதத்தில் முக்கிய பொருட்களின் விலையும், எரிபொருட்கள் பிரிவில், குறிப்பிட்ட சில எரிபொருட்களின் விலையும் குறைந்திருந்தது. அதேசமயம், தயாரிப்புத் துறை பொருட்கள் பணவீக்கம் 7.5 சதவீதமாக உயர்ந்திருந்தது. நடப்பாண்டு ஜூலை மாதத்தில், பணவீக்கம் சற்று குறைந்துள்ளது என்பது, ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இருப்பினும், உணவுப் பொருள் பணவீக்கம், ஜூலை 30ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 9.90 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. இது, அதற்கு முந்தைய வாரத்தில், 8.04 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்து காணப்பட்டது. ரிசர்வ் வங்கியின், நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் செப்., 16ம் தேதி நடைபெற உள்ளது. பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் நிலையில், வங்கிகளுக்கான வட்டி விகிதம், மேலும் உயர்த்தப்படலாம் என்ற அச்சப்பாடும் சந்தை வட்டாரத்தில் நிலவுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|