பதிவு செய்த நாள்
17 ஆக2011
00:30
புதுடில்லி: இந்தியாவின் 12 துறைமுகங்களில், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், சென்ற ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் 19 கோடி டன் அளவிற்கு சரக்கு போக்குவரத்து நடைபெற்றுள்ளது. இது,சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் 18 கோடி டன்னாக இருந்தது. ஆக, துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து 4.84 சதவீதம் அதிகரித்துள்ளது.நாட்டின் முக்கிய துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. சென்ற 2011ம் ஆண்டு மார்ச் வரையிலான நான்கு நிதியாண்டுகளில், நாட்டின் 12 துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்கு 21 சதவீதம் அதிகரித்து 57 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. நடப்பு 2011-12ம் நிதியாண்டில், சென்ற ஏப்ரல்-ஜூலை மாதங்களில், கோல்கட்டா மற்றும் ஹால்டியா துறைமுகங்கள் 1.60 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளன. இது, சென்ற ஆண்டு இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட 7.66 சதவீதம் (1.46 கோடி டன்) அதிகமாகும்.மதிப்பீட்டு காலத்தில், பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு 8.12 சதவீதம் அதிகரித்து 1.80 கோடி டன் என்ற அளவில் இருந்து 1.90 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இதே போன்று விசாகப்பட்டினம் துறைமுகம் 2.40 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளது. இது,சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட, 13.09 சதவீதம்(2.10 கோடி டன்) அதிகமாகும். சென்னையின் எண்ணூர் துறைமுகம் 42.36 லட்சம் டன் சரக்கை கையாண்டுள்ளது. இது, சென்ற ஆண்டு இதே காலத்தில் கையாளப்பட்டதை விட 47.60 சதவீதம் (28.70 லட்சம் டன்) அதிகமாகும்.சென்னை துறைமுகம், சென்ற ஏப்ரல்-ஜூலை மாதங்களில் 2 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் 2.10 கோடி டன்னாக இருந்தது. ஆக, சென்ற ஆண்டை விட நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சரக்கு போக்குவரத்து 4.81 சதவீதம் குறைந்துள்ளது. தூத்துக்குடி துறைமுகம், இதே மாதங்களில் கையாண்ட சரக்கின் அளவு 18.91 சதவீதம் அதிகரித்து 79.58 லட்சம் டன்னில் இருந்து, 94.63 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதே மாதங்களில், கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு 3.88 சதவீதம் உயர்ந்து 60.83 லட்சம் டன்னில் இருந்து, 63.19 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. புதிய மங்களுர் துறைமுகம் இதே மாதங்களில் கையாண்ட சரக்கு 1.06 கோடி டன் என்ற அளவில் இருந்து, 1.14 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.மர்மகோவா துறைமுகம் சென்ற ஏப்ரல்-ஜூலை மாதங்களில் 1.36 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே மாதங்களில் கையாண்டதை விட 5.94 சதவீதம் (1.45 கோடி டன் குறைவாகும். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில், மும்பை துறைமுகத்தின் சரக்கு போக்குவரத்து சரிவடைந்துள்ளது. இத்துறைமுகம், 1.80 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட, 3.83 சதவீதம் (1.87 கோடி டன்) குறைவாகும்.இதே மாதங்களில், ஜவகர்லால் நேரு துறைமுகம் கையாண்ட சரக்கு அளவு, 1.26 சதவீதம் அதிகரித்து 2.13 கோடி டன் என்ற அளவில் இருந்து, 2.15 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. இத்துறைமுகம், சென்ற ஏப்ரல்-ஜூலை மாதங்களில் 2.82 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் கையாண்டதை விட 6.96 சதவீதம் (2.63 கோடி டன்) அதிகமாகும்.நாட்டின் முக்கிய துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி பெற்று வருகிறது. ஆனால், இதற்கு ஈடு கொடுக்கும் விதத்தில், இத்துறைமுகங்களில் சரக்கு கையாளும் திறன் மேம்படுத்தப்படாமல் உள்ளது. சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் முக்கிய 12 துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன், சராசரியாக 88 சதவீத அளவிற்கே இருந்தது. எனினும், இது சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்ட 70 சதவீதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்த, போதுமான நிதி ஆதாரங்கள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசார ஆய்வுக் குழு தாக்கல் செய்த இந்த அறிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், துறைமுகங்களில் சரக்கு கையாளும் திறன் மேலும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|