பதிவு செய்த நாள்
25 ஆக2011
00:10
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், புதன்கிழமையன்று,மீண்டும் சுணக்கம் கண்டது. கடந்த இரண்டு வர்த்தக தினங்களில், பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததையடுத்து 'சென்செக்ஸ்' மொத்தம் 357 புள்ளிகள் அதிகரித்திருந்தது. இதை சாதகமாக பயன்படுத்தி, பல முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர்.இந்நிலையில், சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான 'மூடிஸ்' ஜப்பான் நாட்டின் கடன் தகுதி குறியீட்டை குறைத்துள்ளது. இதையடுத்து, ஜப்பான் உள்ளிட்ட இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.புதனன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, தகவல் தொழில்நுட்பம், உலோகம், மோட்டார் வாகனம், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் விலை குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 213.49 புள்ளிகள் சரிவடைந்து, 16,284.98 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,533.22 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,253.78 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், இந்துஸ்தான் யூனிலிவர், ஹிண்டால்கோ, எச்.டீ.எப்.சி ஆகிய மூன்று நிறுவனப் பங்குகளை தவிர ஏனைய, 27 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. இப்பங்குச் சந்தையில், 2,953 நிறுவனப் பங்குகளின் மீது வர்த்தகம் நடைபெற்றது.இதில், 1,274 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,530 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 149 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றமின்றியும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 60 புள்ளிகள் குறைந்து, 4,888.90 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,962.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,875.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|