பதிவு செய்த நாள்
26 ஆக2011
02:08
புதுடில்லி:உலக வங்கியிடம் இந்தியா பெற்று வரும் கடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, கடன் பெற முடியாத நிலையைத் தவிர்க்க, ஏற்கனவே வாங்கிய கடனில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவதா அல்லது வாங்க உள்ள கடன்களை குறைத்துக் கொள்வதா என்ற இக்கட்டான நிலையை, மத்திய அரசு சந்தித்துள்ளது. உலக வங்கி, வளர்ந்து வரும் நாடுகளின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும்,சமூக மேம்பாட்டுப் பணிகளுக்கும் ஆண்டுக்கு 0.75சதவீத வட்டியில் கடன் வழங்கி வருகிறது. இவ்வங்கியிடம் அதிக அளவில் கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இவ்வங்கி, ஒவ்வொரு நாட்டிற்கும்,'தனிப்பட்ட கடன் உச்சவரம்பு' (எஸ்.பீ.எல்) என்ற அளவுகோலை நிர்ணயித்துள்ளது. ஒரு நாட்டிற்கு வழங்கும் கடன் மற்றும் அந்நாடு திரும்பச் செலுத்திய தொகை ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத் தொகை, 'தனிப்பட்ட கடன் உச்சவரம்பு' என்றழைக்கப்படுகிறது. ஒரு நாட்டின் மக்கள் தொகை, பொருளாதாரம், கடனை திரும்பச் செலுத்தும் தகுதி உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், கடன் உச்சவரம்பை உலக வங்கி ஆண்டு தோறும்நிர்ணயம் செய்கிறது.இதன்படி, உலக வங்கியிடம் இந்தியா பெற்ற கடனுக்கும், செலுத்திய தொகைக்கும் இடையிலான வித்தியாசத் தொகை 1,750 கோடி டாலராக (80 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உள்ளது. நடப்பாண்டு, சென்ற ஜூன் மாத நிலவரப்படி, உலக வங்கி, இந்தியாவிற்கு வழங்கிய கடன் மற்றும் உலக வங்கிக்கு திரும்பச் செலுத்திய தொகை ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசம் 1,140 கோடி டாலராக (52 ஆயிரத்து 440 கோடி ரூபாய்) உள்ளது. வரும் ஆண்டுகளில், இந்தியா, உலக வங்கியிடம் மேலும் அதிக தொகையை கடனாகப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடன் தொகை அதிகரிக்கும் பட்சத்தில், வரும் 2014 - 2015ம் ஆண்டுகளில், உலக வங்கி நிர்ணயித்த, 'தனிப்பட்ட கடன் உச்சவரம்பு' என்ற அளவுகோலை, இந்தியா தாண்டும் நிலை உண்டாகும். இதையடுத்து, மேற்கொண்டு கடன் பெற முடியாத நிலை ஏற்படும் என்று மத்திய நிதியமைச்சகஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இத்தகைய இடர்பாட்டை எந்த விதத்தில் தவிர்க்கலாம் என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. உலக வங்கியிடம் வாங்க உள்ள கடன் அளவை குறைத்துக் கொள்வதா, ஒரு சில கடன்களை முன்கூட்டியே செலுத்துவதா அல்லது கடன் உச்சவரம்பை உயர்த்தக் கோருவதா என பல அம்சங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.உலக வங்கியிடம் கடன் வாங்குவதில், மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையோடு உள்ளது. கடன் ”மையைக் குறைக்க,பல்வேறு திட்டங்களை தனியார் துறையுடன் இணைந்து செயல்படுத்துவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்தியா, அதன் கடன் உச்சவரம்பை எட்டும் பட்சத்தில், தனியார் அல்லது இதர முதலீடுகளை ஈர்க்க வாய்ப்புள்ள திட்டங்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்தும் உலக வங்கி பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, தனியார் கூட்டுடன் உலக வங்கித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியைசந்திப்பதற்கு முன், உலக வங்கி, இந்தியாவிற்கு அளித்த கடனுதவி சராசரியாக 2,500 கோடி டாலர் (1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது. இது, கடந்த 2009-10ம் நிதியாண்டில் (ஜூலை - ஜூன்), 9,300 கோடி டாலராக (4 லட்சத்து 27 ஆயிரத்து 800 கோடி ரூபாய்) உயர்ந்தது. சென்ற 2010 -11ம் நிதியாண்டில், இது 5,500 கோடி டாலராக (2 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. சென்ற 2010ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, இந்தியாவில், உலக வங்கியின் நிதி உதவியுடன் 75 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்காக, உலக வங்கி 2,140 கோடி டாலர் (98 ஆயிரத்து 440 கோடி ரூபாய்) கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|