பதிவு செய்த நாள்
08 செப்2011
04:43
சென்னை : மிந்த்ரா டாட் காம் நிறுவனம், ஆன்-லைன் வாயிலாக ஆடைகள், காலணிகள், அழகு சாதனங்கள், அலங்கரிப்பு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய்து வரும், முன்னணி 10 நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதன் தலைமை செயல் அதிகாரி முகேஷ் பன்சால், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கூறியதாவது: விளையாட்டு துறை சார்ந்த காலணிகள், ஜெர்சிகள், நவநாகரீக ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருள்கள் உள்பட பலதரப்பட்ட பொருட்களை நிறுவனம் இணையதளம் வாயிலாக விற்பனை செய்து வருகிறது. இதற்காக 'நைக்','புமா','லீ, 'பெனட்டன்' போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் மிந்த்ரா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மேலும், சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள பியூச்சர்ஸ் குழுமம், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களுடனும் கூட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில், இதுவரை 70 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்தில், சென்னையின் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் நவீன ஆடை,அலங்காரப் பொருட்களின் சில்லறை விற்பனை துறையின் சந்தை மதிப்பு 4,500 கோடி டாலராக உள்ளது. ஆன்-லைன் வாயிலாக பொருட்கள் வாங்குவது கடந்த ஓராண்டாக அதிகரித்து வருகிறது. நிறுவனம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 500 கோடி ரூபாய் வர்த்தகம் மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு முகேஷ் பன்சால் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|