பதிவு செய்த நாள்
19 செப்2011
03:30
சென்னை : அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள, எஸ் அண்டு பி 500 மற்றும் டோவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரீயல் ஆவரேஜ் (டி.ஜே.ஐ.ஏ.,) குறியீட்டு எண்கள் மீது, ரூபாய் அடிப்படையிலான முன்பேர வர்த்தகத்தை தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ.,) சென்ற ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பங்குச் சந்தையின் மூத்த துணை தலைவர் ஆர்.சுந்தரராமன் கூறியதாவது: இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில், புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். "எஸ் அண்டு பி 500' பியூச்சர் காண்ட்ராக்டுகள் அமெரிக்காவிற்கு வெளியே, ஒரு நாட்டின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது இதுவே முதல் முறை. இந்திய முதலீட்டாளர்கள், அமெரிக்க பங்குச்சந்தை வர்த்தகத்தில் எளிதாக ஈடுபட இது வழி வகுக்கும். தேசிய பங்குச் சந்தையில், ஏற்கனவே வர்த்தகம் புரிந்து வருபவர்களும், இந்த புதிய வர்த்தகத்தில் ஈடுபடலாம். இதற்காக, கூடுதலாக எவ்வித முதலீடும் செய்யத் தேவையில்லை. இதில், ரூபாய் தொடர்பான, எந்த பாதுகாப்பு பிரச்னையும் இல்லாததால், இந்திய சந்தை நேரத்திலேயே வர்த்தகம் புரியலாம். என்.எஸ்.இ., முதலீட்டாளர்களின் தேவைக்கேற்ப புதிய திட்டங்கள், சொத்து பிரிவுகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தும். இத்திட்டம் அறிமுகப்படுத்தியதிலிருந்து, நாள்தோறும், 120 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. கடந்த செவ்வாய் கிழமையன்று, 180 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|