பதிவு செய்த நாள்
28 செப்2011
00:15
மும்பை:உள்நாட்டு வர்த்தகர்களுக்கு, பாதுகாப்பு அளிக்கும் வகையில், சீனாவிலிருந்து, இறக்குமதியாகும் மின்சாதனங்கள் மீது, பொருள் குவிப்பு வரி அமல்படுத்த, பரிசீலனை செய்து வருவதாக, கனரக மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்தார். சீனாவிலிருந்து, அதிகளவில் மின்சார சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, மிக குறைந்த விலையில், உள்நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக, உள்நாட்டு மின்சாதன தயாரிப்பாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.உள்நாட்டு வர்த்தகர்களை பாதுகாக்கும் பொருட்டு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சாதனங்கள் மீது, பொருள் குவிப்பு வரி விதிக்க, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, பல்வேறு இடர்பாடுகளில் சிக்கி தவிக்கும், மின்சாதன உற்பத்தியாளர்களுக்கு, இது சற்று ஆறுதல் அளிப்பதாக அமையும் என, பிரபுல் படேல் தெரிவித்தார். தற்போது, 570 கோடி டாலர் மதிப்பு கொண்ட, இந்திய மின் உற்பத்தி உபகரணங்கள் சந்தை, வரும் 2022ம் ஆண்டிற்குள், 2,500-3,000 கோடி டாலர் அளவிற்கு வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி இலக்கினை அடைந்திட, அரசு மற்றும் வர்த்தகர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, இந்திய எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் சந்தக் கூறினார். இவர் அண்மையில், இச்சங்கத்தின் (2011-12ம் ஆண்டிற்கு) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|