பதிவு செய்த நாள்
02 அக்2011
02:11
இந்தியாவின் வெளிநாட்டு கடன், நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், முந்தைய காலாண்டை விட 1,050 கோடி டாலர் (50 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்து, 31 ஆயிரத்து, 700 கோடி டாலராக ( 15 லட்சத்து, 22 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அயல்நாட்டு வர்த்தக கடன் மற்றும் குறுகிய கால கடன் பத்திரங்கள் வாயிலாக திரட்டப்பட்ட கடன்கள் அதிகரித்துள்ளதால், நாட்டின் அயல்நாட்டு கடன் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் மொத்த அயல்நாட்டு கடனில், வர்த்தக கடன் பிரிவு 24 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. குறுகிய கால கடன் பிரிவின் பங்களிப்பு 21.6 சதவீதம் என்றளவில் உள்ளது.அயல்நாட்டு இந்தியர்களின் டெபாசிட் 16.7 சதவீதமாகவும், பலதரப்பட்ட கடன்களின் பங்களிப்பு 15.6 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. பரஸ்பர கடன்கள் 8.34 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. இத்துடன் வணிக கடன் 6 சதவீதமாகவும், சர்வதேச நிதியத்தின் கடன் 2 சதவீதமாகவும், ரூபாய் அடிப்படையிலான கடன் 0.5 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில், அயல்நாட்டு வர்த்தக கடன் 430 கோடி டாலரும், குறுகிய கால கடன், வணிக கடன்கள் 307 கோடி டாலரும் உயர்ந்துள்ளன.நீண்ட கால கடன்கள் 24 ஆயிரத்து, 850 கோடி டாலராகவும், குறுகிய கால கடன்கள் 6,850 கோடி டாலர் என்ற அளவிலும் உள்ளது. அயல் நாட்டு கடனில், மத்திய அரசின் பங்களிப்பு 24.8 சதவீதமாகவும், அரசு சாரா கடன்களின் பங்களிப்பு 75.2 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு கடனில், டாலர் அடிப்படையிலான கடன்களின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது. சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் டாலர் அடிப்படையிலான அயல்நாட்டு கடன்களின் பங்களிப்பு 54.2 சதவீதமாக உள்ளது.ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில், நாட்டின் மொத்த அயல்நாட்டு கடன் 70 சதவீதம் அதிகரித்திருப்பதற்கு, வர்த்தக கடன்கள் மற்றும் குறுகிய கால வணிக கடன்களின் பங்களிப்பு, உயர்ந்தது தான் முக்கிய காரணம். இது, நாட்டின் இறக்குமதி அதிகரித்துள்ளதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது என, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் கடன் பெற்றுள்ளன. இக்கடன்களை அடைக்க, அவை மீண்டும் கடன்களை பெற்று வருவதால், நாட்டின் அயல்நாட்டுக் கடன் அதிகரித்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, இந்திய நிறுவனங்களின் அயல்நாட்டு கடன்கள் அதிகரித்திருப்பது மட்டுமின்றி, அவை குறுகிய முதிர்வு காலத்தைக் கொண்டதாகவும் உள்ளன. இந்த வகையில், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், இந்நிறுவனங்கள் அதிகளவில் கடன்களை திரும்ப அளிக்க வேண்டியுள்ளது. அதனால், அவை மீண்டும் கடன்களை பெற்று வருகின்றன என, கிரிசில் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள்: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வங்கிகளில் செய்துள்ள டெபாசிட், 120 கோடி டாலர் (5,880 கோடி ரூபாய்) அளவிற்கு உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 110 கோடி டாலர் (5,390 கோடி ரூபாய்) என்றளவில் இருந்தது.அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீட்டிற்கு, இந்திய வங்கிகள் அதிகளவு வட்டி தருவதன் காரணமாகவே, டெபாசிட் தொகை உயர்ந்துள்ளதாக வங்கிகளின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, நடப்பாண்டின் முதல் காலாண்டில், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், இந்திய வங்கிகளில் மேற்கொண்ட டெபாசிட் தொகை, 120 கோடி டாலர் அதிகரித்து, 678 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே காலத்தில், 641 கோடி டாலராக இருந்தது என, பொதுத் துறை வங்கியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நடப்பு 2011ம் ஆண்டு, ஜூன் வரையிலான காலத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட், 5,290 கோடி டாலராக உள்ளது. இது, இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடனில் (31 ஆயிரத்து 700 கோடி டாலர்), 16.7 சதவீதமாகும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.வெளிநாடு வாழ் இந்தியர்கள் செலுத்திய மொத்த டெபாசிட் தொகையில், ஒரு ஆண்டு வரையிலான முதிர்வு காலம் கொண்ட குறைந்த கால டெபாசிட்டுகளின் பங்களிப்பு, 82 சதவீதமாக உள்ளது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|