பதிவு செய்த நாள்
09 அக்2011
10:31
அமெரிக்க அரசு, வறுமையில் வாடுவோருக்காக செலவிடும் தொகை ஆண்டுக்கு 16,700 கோடி டாலர் (சுமார் ரூ.8.19 லட்சம் கோடி) என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில், கடந்த சில வருடங்களாக வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேலையில்லா திண்டாட்டம், குறைந்த ஊதியம் போன்றவையே வறுமைக்கு காரணங்கள் என்று கூறப்படுகிறது. 2008ம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார தேக்கநிலை அங்கு பலரை வறுமையில் தள்ளியிருக்கிறது. எனவே, மக்களின் வறுமை ஒழிப்பு, கல்வி, மருத்துவ வசதி போன்ற பல்வேறு அடிப்படை தேவைகளை அமெரிக்க அரசே பூர்த்தி செய்து வருகிறது. அமெரிக்காவில், 2007ம் ஆண்டில், வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை 3.68 கோடியாக இருந்தது. இது, 2010ம் ஆண்டில் 4.88 கோடியாக உயர்ந்துள்ளது. அங்கு வறுமையில் சிக்கியவர்கள் எண்ணிக்கை12 சதவீதம் அதிகரித்துள்ளது. இவர்களுக்காக 2005ம் ஆண்டில் 9,000 கோடி டாலர்களை செலவிட்ட அமெரிக்க அரசு 2010ம் ஆண்டில் 16,750 கோடி டாலர் செலவிட்டுள்ளது. அதாவது, மருத்துவ வசதிக்காக 13,050 கோடி டாலரும், கல்விக்காக 1,920 கோடி டாலரும், அவசர உணவு தேவைக்காக 1,780 கோடி டாலரும் செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமெரிக்கருக்கும், சராசரியாக 542 டாலர்செலவிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில், வறுமை ஒழிப்புக்காக செலவிடப்பட்ட தொகை, மாகாணம் வாரியாக, அதிகபட்சமாக புளோரிடாவுக்கு 62 சதவீதம், கலிபோர்னியாவுக்கு 47 சதவீதம், மேரிலாந்துக்கு 44 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மசாசூட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த பிராண்டிஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் மூலமாக இத்தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|