பதிவு செய்த நாள்
11 அக்2011
00:20
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (பி.எப்.சி) நிறுவனம், மின் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுமாக, கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 16 ஆயிரத்து 800 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. வரிச் சேமிப்பு மற்றும் வரிவிலக்குடன் கூடிய அடிப்படை கட்டமைப்பு கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 11 ஆயிரத்து 900 கோடி ரூபாயும், நடுத்தர கால அடிப்படையிலான, சர்வதேச கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 4,900 கோடி ரூபாயும் திரட்டும் வகையில் ஒப்புதல் பெற்றுள்ளது என, இந்நிறுவனத்தின் இயக்குனர் (நிதி) ஆர்.நாகராஜன் தெரிவித்தார்.மேற்கண்ட மொத்த நிதியில், 200 கோடி ரூபாயை திரட்டும் வகையில், இந்நிறுவனம் சென்ற செப்டம்பர் 29ம் தேதி, கடன் பத்திரங்களை வெளியிட்டது. பத்தாண்டுகளில் முதிர்வடையக்கூடிய கடன் பத்திரங்களுக்கு 8.50 சதவீத வட்டியும், 15 ஆண்டு காலத்திற்கான கடன் பத்திரங்களுக்கு 8.75 சதவீத வட்டியும் வழங்கப்படும். தற்போது, எந்த விதமான புதிய பங்கு வெளியீடுகளும் இல்லாததால், நிறுவனத்தின் கடன் பத்திர வெளியீட்டிற்கு, முதலீட்டாளர்களிடமிருந்து, நல்லளவில் ஆதரவு கிடைக்கும் என நாகராஜன் குறிப்பிட்டார். நிறுவனம், வரிவிலக்குடன் கூடிய கடன் பத்திர வெளியீட்டையும் செப்டம்பர் 29ம் தேதி துவக்கியுள்ளது. இதன் வாயிலாக, 5,000 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து திரட்ட திட்டமிடப்பட்டுள்ள கடன் பத்திர வெளியீட்டிற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், 4,900 கோடி ரூபாய் திரட்டப்படும். சந்தை நிலவரத்தை பொறுத்து, இவ்வெளியீடு, நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|