பதிவு செய்த நாள்
12 அக்2011
00:21
மும்பை:பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பீ.ஐ) அதன் மூலதன இருப்பு விகிதத்தை அதிகரித்து கொள்வதற்காக, அதன் பங்குதாரர்களுக்கு, உரிமைப் பங்குகளை வெளியிட்டு 5,000 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இது குறித்து, இவ்வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிதி அதிகாரியுமான திவாகர் குப்தா கூறுகையில்," உரிமைப் பங்கு வெளியீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் நிலையில், வங்கியின் மூலதன இருப்பு விகிதம், நடப்பு நிதியாண்டின் இறுதியில், 8 சதவீதமாக அதிகரிக்கும். 5,000 கோடி ரூபாய்க்கான உரிமைப் பங்கு வெளியீட்டில், மத்திய அரசின் பங்காக 3,000 கோடி ரூபாயும், சில்லரை பங்கு முதலீட்டாளர்களிடமிருந்து, 2,000 கோடி ரூபாயும் பெறப்படும்' என்று தெரிவித்தார். பாரத ஸ்டேட் வங்கியின் மூலதன இருப்பு விகிதம் குறைந்ததையடுத்து, அண்மையில், சர்வதேச தரக்குறியீட்டு நிறுவ னமான மூடிஸ், இவ்வங்கியின் தரக் குறியீட்டை "சி- ' என்ற அளவிலிருந்து, "டீ+' ஆக குறைத்தது என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வங்கியின் குறைந்தபட்ச மூலதன இருப்பு விகிதம் 8 சதவீத அளவிற்கு இருக்க வேண்டும். ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு இறுதியில், 7.6 சதவீதமாக குறைந்திருந்தது. இவ்வங்கி கடந்த 2008ம் ஆண்டு, உரிமைப் பங்கு வெளியீட்டின் வாயிலாக,16 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டி கொண் டது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் வங்கியின் நிகர வசூலாகாத கடனை வெகுவாக குறைக்கும் வகையில், நடவடிக் கைகள் எடுக்கப்படும். சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டின் இறுதியில், வங்கியின் நிகர வசூலாகாத கடன் 1.63 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இதனை, 1.5 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது, என, இவ்வங்கியின் தலைவர் பிரதீப் சவுத்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|