பதிவு செய்த நாள்
18 அக்2011
00:10
புதுடில்லி : தொழிலாளர் சேமநல நிதியம், நடப்பு 2011-12ம் நிதியாண்டிற்கு, 9 சதவீத வட்டி வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நிதியத்தின் செயல்படாத கணக்குகளில் இருந்து திரும்ப பெறப்பட்ட தொகை, எதிர்பார்த்ததை விட, குறைவாக உள்ளது. மேலும், வங்கி வட்டி விகிதம் உயர்ந்துள்ளதால், நடப்பு நிதியாண்டிற்கு 9 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வட்டி வழங்குவது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வு காலம்: தொழிலாளர் சேமநல நிதியம், 4 கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமானோரின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை நிர்வகித்து வருகிறது. ஒரு நிறுவனம், 20க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டிருந்தால், தொழிலாளர் சேமநல நிதிய கணக்கை பராமரித்து வர வேண்டும். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம், சேமநல நிதியத்தில் சேமித்து வரப்படுகிறது. இதே தொகையை நிறுவனங்கள், அவற்றின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இப்படி சேமிக்கப்பட்டு வரும் தொகை, வட்டியுடன் சேர்த்து, ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது அவருக்கு அளிக்கப்படும். ஓய்வு பெறும் காலத்தில் பயன்பெறும் நோக்குடன், இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும், பெரும்பாலோர் ஒரு நிறுவனத்தில் இருந்து விலகும்பட்சத்தில், தங்களின் சேமநல நிதிய கணக்கை முடித்துக் கொள்கின்றனர். புதிய நிறுவனத்தில் புதிய கணக்கு தொடங்குகின்றனர். கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஓய்வு காலத்திற்குப் பின் சேமநல நிதியத்தில் இருந்து சேமிப்பை பெறுவோர், 30 சதவீத அளவிற்கு உள்ளனர் என்பது தெரியவந்தது. திட்டங்கள்: இதையடுத்து, இடையில் கணக்கை முடிப்பதை தடுக்கவும், தொடர்ந்து கணக்கை பராமரிப்போரை ஊக்குவிக்கவும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, பணி மாறும் போது, சேமநல நிதியக் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான காலம் வெகுவாக குறைக்கப்பட்டது. மேலும், சேமநல நிதியம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும், படிப்படியாக ஆன்-லைன் வசதிக்கு மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்துடன், சேமநல நிதிய கணக்குகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படாமல் இருந்தால், அவை செயல்படாத கணக்குகளாக கருதப்பட்டு, வட்டி வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், இக்கணக்குகளில் இருந்து கிடைக்கும் வட்டி, நிதியத்தில் சேர்க்கப்பட்டு, பிற பயனாளிகள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு நல்ல அளவில் பயன் கிடைத்துள்ளது. ஏராளமானோர் தங்களின் செயல்படாத கணக்குகளை புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. சேமநல நிதியத்தில், 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு செயல்படாத கணக்குகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கணக்குகளில் இருந்து நடப்பு நிதியாண்டில், 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கே பணம் திரும்பப் பெறப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், எஞ்சியுள்ள 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கிடைக்கும் வட்டியை, இதர சந்தாதாரர்களுக்கு பகிர்ந்தளிக்க நிதியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 0.50 சதவீத வட்டி, சேமநல நிதி சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்ப்பு: நிதியத்திற்கு அரசு கடன்பத்திர முதலீடுகள் வாயிலான வட்டி வருவாய் ஒரு சதவீதம் உயர்ந்துள்ளது. மற்றும் பிற முதலீடுகளின் மூலம் மொத்தம் 8.75 சதவீத அளவிற்கு வட்டி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளர் சேமநல நிதி கணக்கிற்கு, கடந்த ஐந்தாண்டுகளாக 8.5 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்ற 2010-11ம் ஆண்டு, இந்த வட்டி விகிதம் 9.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதற்கு நிதியமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தபோதிலும், 1,700 கோடி ரூபாய் உபரி தொகை உள்ளதால், கூடுதல் வட்டி வழங்குவதாக நிதியம் தெரிவித்தது. அறிவிப்பு: இதையடுத்து, நடப்பு 2011-12ம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வரும் வரை, கணக்கை முடிப்பவர்களுக்கு 9.5 சதவீத வட்டி வழங்கப்படும் என்று, சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், செயல்படாமல் முடங்கியுள்ள கணக்குகளில் இருந்து திரும்ப பெறப்பட்ட தொகை, எதிர்பார்த்த அளவை விட குறையும் என்பதால், குறைந்தபட்சம் 9 சதவீத வட்டி வழங்கப்படும் என்று தெரிகிறது. தொழிலாளர் சேமநல நிதியத்தின் மத்திய அறக்கட்டளைகள் வாரியம், விரைவில் கூடி, இது குறித்து முடிவெடுக்கும் என்று நிதியத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|