பதிவு செய்த நாள்
03 நவ2011
10:47
சென்னை உட்பட பெரு நகரங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள், அதிகபட்ச சில்லரை விற்பனையை(எம்.ஆர்.பி.,) விட, கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க, ரிலையன்ஸ் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில், ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் திட்டம், விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பாலை, பதப்படுத்தி, 19 சோதனைகளுக்கு உட்படுத்தி, நுகர்வோருக்கு, ஆவின் சப்ளை செய்கிறது. சென்னைக்கு மட்டும், பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்து, தினந்தோறும் 10 லட்சம் லிட்டர் பால் வரத்து இருக்கிறது. நுகர்வோருக்கு தரமான பால் வினியோகம் செய்வதற்காக, சென்னை பெருநகரில், 165 பாலகங்கள் செயல்படுகின்றன. சென்னையில், பால் விற்பனையை உயர்த்த, காஞ்சிபுரம் - காக்களூர் பால்பண்ணை, 3.65 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படுகிறது. ஆவின் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக, சென்னையில் 34 மொத்த விற்பனையாளர்களை, கமிஷன் அடிப்படையில் ஆவின் நிர்வாகம் நியமித்துள்ளது. இவர்கள், சில்லரை வியாபாரிகளான பெட்டிக்கடை வைத்திருப்பவர்களிடம், அவர்களுக்கு வருகிற கமிஷனில், குறிப்பிட்ட சதவீதத்தை விட்டுக் கொடுத்து, ஆவின் பால் பாக்கெட்டுகளை விற்பனைக்கு கொடுத்து விடுகின்றனர். இங்கு தான் பிரச்னை எழுகிறது. பெட்டிக்கடைக்காரர்கள், ஆவின் பால் பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ள மொத்த விலையை விட, ஒரு ரூபாய் முதல், மூன்று ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால், பால் பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்தும் நுகர்வோர்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னையை சமாளிக்க, கால்நடைத்துறை அரசு செயலர் ககன்தீப்சிங் பேடி, ஆவின் மேலாண்மை இயக்குனர் மோகன், ஆவின் விஜிலென்ஸ் ஐ.ஜி., ரவி ஆகியோர் தலைமையில், ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக, ஆவின் பால் பாக்கெட்டுகளை, ரிலையன்ஸ் போன்ற தனியார் சூப்பர் மார்க்கெட் கடைகளில், விற்பனை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். தீபாவளி ஆவின் விற்பனை பால்கோவா-31 டன்(கிலோ 250) மைசூர் பாகு-24 டன்(கிலோ 250) குளோப்ஜாமூன்-1.7 டன்(கிலோ 250) இதர இனிப்பு வகைகள்-7.5 டன் மொத்த விற்பனை 1.62 கோடி ரூபாய் இது குறித்து, ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு லிட்டர் ஆவின் பால் 20.50 ரூபாய், ஆரோக்யா 28 ரூபாய், ஹெரிடேஜ் 30 ரூபாய். இன்னும் தனியார் பால் பாக்கெட்டுகள், பல்வேறு விலைகளில் விற்கப்படுகின்றன. தனியார் பால் பாக்கெட்டுகளை விட, ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலை மிகவும் குறைவு. மாதாந்திர ஆவின் பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, வழக்கமாக விற்கப்படும் ஆவின் பால் விலையில், குறைத்து விற்கப்படுகிறது. சென்னையில் ஆவின் பால் பாக்கெட்டுகளை, நுகர்வோரிடம் சேர்ப்பதற்காக, மொத்த விற்பனையாளர்கள் 34 பேர், ஆவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமே எங்கள் கட்டுப்பாட்டில் வருகின்றனர். மொத்த விற்பனையாளர்கள், அவர்களுக்கு கீழ், துணை விற்பனையாளர்களை நியமிக்கின்றனர். இவர்கள், பெட்டிக்கடைக்காரர்களுக்கு, பால் பாக்கெட்டுகளை வினியோகிக்கின்றனர். இதை கண்காணிக்க கூடுதல் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்கும் சில்லரை வியாபாரிகள் மீது, நாங்கள் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்களுக்கு பால் பாக்கெட்டுகளை கொடுக்கும் மொத்த வியாபாரிகளுக்கு முதற்கட்டமாக அபராதம் விதித்துள்ளோம். அடுத்த கட்டமாக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வோம். ஆவின் பால் பாக்கெட் தொடர்பாக பொதுமக்கள் 18004253300 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இப்பிரச்னையை களைவதற்காக, ரிலையன்ஸ் போன்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களுக்கு, ஆவின் நிர்வாகமே நேரடியாக, பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்யும் திட்டம் உள்ளது. சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் பொருட்களுக்கு "பில்' கொடுப்பதால், பத்து பைசா கூட கூடுதல் விலைக்கு விற்க முடியாது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|