பதிவு செய்த நாள்
05 நவ2011
00:34
புதுடில்லி:இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்கள், கடுமையான நிலக்கரி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இருப்பை விட, மிகக் குறைவாகவே நிலக்கரி உள்ளதால், மின் உற்பத்தி அடியோடு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கா விட்டால், இந்தியா இருளில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது.நாட்டில், பல்வேறு மாநிலங்களில் உள்ள அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தித் திறன், 86 ஆயிரத்து 717 மெகா வாட் என்ற அளவிற்கு உள்ளது. பொதுவாக, இந்நிலையங்களில் மின் உற்பத்திக்கு, குறைந்தபட்சம் 22 நாட்களுக்கு தேவையான நிலக்கரியை கையி ருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால், 89 மின் நிலையங்களின், நிலக்கரி கையிருப்பு, இதை விட குறைவாகவே உள்ளது. இந்த நிலக்கரி, ஒரு வாரத்திற்கு மட்டுமே மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு உதவும் என்று கூறப்படுகிறது. இந் நிலையங்களின் மின் உற்பத்தித் திறன் 40ஆயிரம் மெகாவாட் என்ற அளவிற்கு உள்ளது. இதுதவிர, 8,500 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில், ஓரிரு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது. நிலக்கரி இல்லாமல் போகும் பட்சத்தில்,இந்நிலையங்களின் மின் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு,மின் வினியோகம் நின்று போகும் வாய்ப்பு உள்ளதாக இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.அனல் மின் நிலையங் கள், கடந்த சில ஆண்டுகளாகவே நிலக்கரி பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன.இந்நிலையில்,ஆந்திராவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் தெலுங்கானா போராட்டம், சுரங்க தொழிலாளர் களின் வேலை நிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால், நிலக்கரி உற்பத்தி மற்றும் வினியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலக்கரியை தடையின்றி வினி யோகிக்குமாறு, பொதுத் துறையை சேர்ந்த, கோல் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால் தான், அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி அடியோடு முடங்காமல் உள்ளது. எனினும், அனல் மின் நிலையங்கள், நிலக்கரியை பொறுத்தவரை, நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று விரும்புகின்றன. நிலக்கரி இறக்குமதி செலவை ஈடு செய்ய முடியாத அளவிற்கு மின் வினியோகக் கட்டணம் குறைவாக உள்ளது. இத னால், அனல் மின் நிறுவனங்கள், நிலக்கரி இறக்குமதியை தவிர்த்து, உள்நாட்டு சப்ளையை எதிர்நோக்கியுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய அனல் மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி., நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்க, நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் திரவ இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரியை இறக்குமதி செய்வது குறித்து பரிசீ லித்து வருகிறது. குறுகிய கால ஒப்பந்தத்தில் நிலக்கரி விலை அதிகமாக உள்ளதால், இந்நிறுவனம், இத்தகைய செயல்பாட்டை மேற் கொள்ள உள்ளது. அண்மையில் இந்நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழு கூடியது. இக்கூட்டத்தில், செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவினங்களை குறைத்து, மின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப் பட்டது. நிலக்கரி பற்றாக்குறையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், நாட்டின் மின் உற்பத்தி மட்டுமின்றி, தொழில் வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|