பதிவு செய்த நாள்
06 நவ2011
10:20
சேலம் : தமிழகத்தில் தொடரும் மின்தடை, பருவ மழை காரணமாக, காலண்டர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காலண்டர்களின் விலை, 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சிவகாசியை அடுத்து, சென்னை, சேலம் ஆகிய இடங்களில், காலண்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் தாதகாப்பட்டி, அரிசிப்பாளையம், அம்மாபேட்டை, பள்ளப்பட்டி, குமாரசாமிப்பட்டி, பொன்னம்மாபேட்டையில், 150க்கும் மேற்பட்ட பைண்டிங் பட்டறைகள், காலண்டர் உற்பத்தியில் ஈடுபடுகின்றன. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்திலேயே, காலண்டர் உற்பத்தி துவங்கிவிடும். தற்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டு, அச்சக தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அக்டோபர் முதல் வாரத்தில் தான், உற்பத்தி துவங்கப்பட்டது. எதிர்பார்த்த அளவு ஆர்டர் இல்லாததால், தயாரிப்பு பணி மந்தகதியில் நடந்தது. மூலப்பொருட்கள் விலை உயர்வு: புதுவருட பிறப்பிற்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், சங்கங்கள், காலண்டர்கள் ஆர்டர் கொடுக்க துவங்கி உள்ளன. தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையால், காலண்டர் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காலண்டர் உற்பத்திக்கு தேவையான அட்டை, களிங்கம், பேப்பரின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு டன், 6,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட காலண்டர் அட்டை, தற்போது டன், 8,250 ரூபாய்க்கு விற்கிறது. களிங்கம், பசை ஆகியவற்றின் விலையும், கிலோவுக்கு, 5 முதல், 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மேலும், காலண்டர்களுக்கு பயன்படுத்தப்படும், அன்பிளீச்சிங் பேப்பர், கடந்த ஆண்டு டன், 28 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது, தற்போது, 39 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. 22 சதவீதம் அதிகம்: மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக, காலண்டர்களின் விலையும் உயர்ந்துள்ளது. தினசரி காலண்டர்களில், 12க்கு 6, 6க்கு 3 சைஸ்களில் வரும் அட்டைகளின் விலை, 21 ரூபாயில் இருந்து, 31 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் பயன்படுத்தப்படும் கேக், (தினசரி நாட் குறிப்பு) அளவிற்கு ஏற்றார் போல், 5, 10, 40 ரூபாய் ஆகிய விலையில் விற்கப்படுகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இவற்றின் விலை, 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர காலண்டர்களில், அவற்றில் உள்ள சீட்டுகளுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம், 14 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக, 47 ரூபாய் வரை விற்கிறது. கடந்த ஆண்டை விட, 22 சதவீதம் வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. விலை மேலும் அதிகரிக்கும்: சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்த, பைண்டிங் ஒர்க்ஸ் உரிமையாளர் கண்ணன் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் தடையால், இத்தொழிலில் கடும் பாதிப்புஏற்பட்டது. தற்போது இப்பிரச்னையில் இருந்து சற்று விடுபட்டுள்ள நிலையில், பேப்பர், அட்டைகளின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு, கூலி ஆட்களுக்கு பற்றாக்குறை போன்றவை, இத்தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.தொடர்ந்து பெய்து வரும் மழையால், காலண்டர்களை உலர வைத்து, குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்ய முடியாத நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வால், 25 முதல், 30 சதவீதம் வரை, காலண்டர்கள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இது, டிசம்பர் இரண்டாவது வாரத்தில், மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு கண்ணன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|