பதிவு செய்த நாள்
12 நவ2011
09:30
புதுடில்லி : தபால் அலுவலகங்களில் சாதாரண சேமிப்பு கணக்கு, மாதாந்திர வருவாய் திட்டம் மற்றும் பொதுசேமநல நிதி திட்டம் போன்ற சிறுசேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கான வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு: தபால் அலுவலக சாதாரண சேமிப்புக் கணக்கிற்கான வட்டி வீதம் 3.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர வருவாய் திட்டம் (எம்.ஐ.எஸ்.,) மற்றும் பொதுசேமநல நிதி திட்டங்களுக்கான (பி.பி.எப்.,) வட்டி வீதம் 8.2 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு செய்யப்படும் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி வீதம், 6.25 சதவீதத்தில் இருந்து, 7.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதர கால அளவுடன் கூடிய டெபாசிட்களுக்கான வட்டி வீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுசேம நல நிதியில் முதலீடு செய்வதற்கான உச்சவரம்பு ஆண்டுக்கு 70 ஆயிரம் ரூபாய் என்பதிலிருந்து, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரங்கள் இனி கிடையாது. ஐந்து ஆண்டுக்கான தொடர் வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி வீதம் 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்து ஆண்டில் முதிர்வடையக்கூடிய, 8.7 சதவீத வட்டியுடன் கூடிய, தேசிய சேமிப்புப் பத்திரங்கள் வெளியிடப்படும். மாதாந்திர வருவாய் திட்டம் முதிர்வடையும் போது வழங்கப்படும் 5 சதவீத போனஸ் இனி கிடையாது. பொதுசேமநல நிதி மற்றும் மூத்த குடிமக்கள் திட்டத்திற்கான ஏஜன்ட் கமிஷன் இனி கிடையாது. மாதாந்திர வருவாய் திட்டம் மற்றும் தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான முதிர்வு காலம், தற்போதுள்ள ஆறு ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான புதிய வட்டி வீதங்கள் எல்லாம் விரைவில் வெளியிடப்படும் முறையான அறிவிப்புக்குப் பின் அமலுக்கு வரும். வட்டி வீதத்தை உயர்த்தும் முடிவு, ஷியாமளா கோபிநாத் கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|