பதிவு செய்த நாள்
20 நவ2011
02:42
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், மின் உற்பத்தியை அதிகரிக்க, தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சூரிய எரிசக்தி, பயோமாஸ், காற்றாலை போன்றவற்றின் வாயிலாக மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை, பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு, சூரிய எரிசக்தி மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள், 3,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. முதல் கட்டமாக, 30 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அமைப்பின் (டெடா) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுதீப் ஜெயின், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு: தமிழக அரசு, மாநிலத்தின் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு முனைப்புத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
இதற்காக, நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வகையில், "டெடா' அமைப்பு, மாநில அளவில் அரிமா சங்கங்களுடன் இணைந்து,"பசுமை எரிசக்தி விரும்புவோம்' என்ற பெயரில், விழிப்புணர்வு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்ட சாதனங்கள் பொருத்தப்பட்ட நடமாடும் ஊர்திகள் மூலம், பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்ற செப்டம்பர் முதல், மாநில அளவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை, 750க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களில், இந்த விழிப்புணர்வு முகாம்கள் வாயிலாக, போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.
சூரிய சக்தி மற்றும் தாவர கழிவுகள் மூலம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மின் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும், மேற்கண்ட திட்டங்கள் வாயிலாக, எவ்வாறு மின் உற்பத்தி செய்வது, பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வரும் 25ம் தேதி மற்றும் அடுத்த ஆண்டு, பிப்ரவரி, மார்ச் மாதங்களில், பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
குறிப்பாக, பிப்ரவரி மாதம் பள்ளி மாணவர்கள் பங்குபெறும் வகையில், சைக்கிள் பேரணி மூலம் விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 11 மற்றும் 12ம் தேதிகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், சென்னையில் நடைபெற உள்ளது.
சூரிய சக்தி மூலம் மின் விளக்குகளை பயன்படுத்துவது, சமைப்பது, வாட்டர் ஹீட்டர் வாயிலாக சுடுநீர் தயாரிப்பது போன்ற, 9 வாட் முதல் 1 கிலோ வாட் வரையிலான மின் திட்டங்களுக்கு, மத்திய அரசு மானியம் அளிக்கிறது. இத்திட்டங்கள், 2,500 முதல் 3 லட்ச ரூபாய் வரையிலான மதிப்பு கொண்டவை. இவை தவிர, விவசாயத்திற்கு மோட்டார் பம்புகள் மூலம் பாசன வசதி மேற்கொள்வதற்கான, 5 கிலோ வாட் சூரிய எரிசக்தி பேனல்கள் அமைத்து, மின் உற்பத்தி மேற்கொள்வதற்கான திட்ட செலவு, 9 லட்ச ரூபாயாகும்.
இதற்கு அதிகபட்சமாக, 30 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மானிய தொகை போக, 75 சதவீத தொகைக்கு வங்கிக் கடன் பெறவும் வசதி உள்ளது. மத்திய அரசு வழங்கும் மானிய தொகை, "டெடா' அமைப்பின் மூலம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
"டெடா' அமைப்பின் பட்டியலில், 85 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, பொதுமக்கள், சூரிய எரிசக்தி திட்டங்களை தங்கள் இல்லங்களிலேயே அமைத்து பயனடையலாம். இதனால், மின்சார கட்டணச் செலவு வெகுவாக குறையும் என்பதுடன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல், தடையில்லா மின் சக்தி மற்றும் மின்சார சேமிப்பையும் பெற முடியும். இவ்வாறு சுதீப் ஜெயின் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|