பதிவு செய்த நாள்
26 நவ2011
00:32
புதுடில்லி:ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் விளை பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், மத்திய அரசு உரத்திற்கு அளிக்கும் மானியம், 95 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், நடப்பு நிதியாண்டிற்கு, 49 ஆயிரத்து 998 கோடி ரூபாய் அளவிற்கே, மானியம் வழங்கும் வகையில், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில்,மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மானியச் செலவினத்தை 1.5 சதவீதமாக குறைக்கவும், நாட்டின் நிதிப்பற்றாக்குறையை 4.6 சதவீதம் என்றளவில் வைத்திருக்கவும், மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.ஆனால், கச்சா எண்ணெய், உரம் உள்ளிட்டவற்றின் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதால், மத்திய அரசின் மானியச் செலவினம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிதிப்பற்றாக்குறையும், அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008-09ம் நிதியாண்டில், சர்வதேச பொருளாதார நெருக்கடியால், விளைபொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. அப்போது, உர உற்பத்தியாளர்களும், இறக்குமதியாளர்களும், அரசு நிர்ணயித்த விலையில் உரங் களை உள்நாட்டில் விற்பனை செய்தனர்.
இதனால், ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு 75 ஆயிரத்து, 849 கோடி ரூபாய் ரொக்க மானியமும், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களையும் வழங்கியது.அது போன்று, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை கட்டுப்பாடு காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாயின. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு, 75 ஆயிரத்து 942 கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் கடன் பத்திரங்களை, மத்திய அரசு வழங்கியது. இதனால், கடந்த 2008-09ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப்பற்றாக்குறை 7.8 சதவீதமாக உயர்ந்தது.நடப்பு 2011-12ம் நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து பெரும்பாலான உரங்களின் விலை, இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு பொட்டாஷ் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் மீதான விலைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொண்டது.
அதே சமயம், ஊட்டச் சத்து அடிப்படையிலான உரங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், விலைக் கட்டுப்பாட்டு நடைமுறை தொடர்கிறது. எனினும் நாட்டில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் யூரியா மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.நாட்டில் பரவலாக பயன்படுத்தப்படும் டை-அமோனியம் பாஸ்பேட் விலை, சென்ற ஏப்ரல் மாதம் ஒரு டன், 9,950 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, அக்டோபர் மாதம், 18 ஆயிரத்து 350 ரூபாயாக உயர்ந்துள்ளது. அது போன்று, பயிர்களின் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்கும் பொட்டாஷியம் குளோரைடு விலையும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. சென்ற அக்டோபர் மாத நிலவரப்படி, ஒரு டன் பொட்டாஷியம் குளோரைடு, 11 ஆயிரத்து 300 ரூபாயாக உயர்ந்துள்ளது.
பயிர்களுக்கான இதர ஊட்டச்சத்து உரங்களின் விலையும் அதிகரித்துள்ளது. இவற்றை உற்பத்தி செய்வோரும், இறக்குமதி செய்யும் வர்த்தகர்களும், விலை அதிகரிப்பை, விவசாயிகள் மீது சுமத்தி வருகின்றனர்.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், மத்திய அரசு, முக்கியமான துறைகளுக்கான மானியச் செலவை, 1லட்சத்து 34 ஆயிரத்து 211 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டில் வழங்கப்பட்ட மானியத்தை விட, 13 சதவீதம் குறைவாகும்.
இது குறித்து, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறும்போது, "நடப்பாண்டு, சர்வதேச அளவில் உரங்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலை, மிகப் பெரிய அளவிற்கு உயர வாய்ப்பில்லை' என்று தெரிவித்திருந்தார்.ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வால் அவரது மதிப்பீடு பொய்த்து விட்டது. சென்ற ஆண்டு, 85 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய், தற்போது 107-113 டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் பொட்டாஷியம் விலை உயர்ந்துள்ள நிலையில், அதை தயாரிக்கும் நிறுவனங்களிடம், மத்திய அரசு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி, குறிப்பிட்ட விலைக்கு இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. இதன்படி ஒரு டன் பொட்டாஷியம் 470-530 டாலர் விலையில் இறக்குமதி செய்யப்பட உள்ளது. ஏற்கெனவே செய்த மதிப்பீட்டின்படி, ஒரு டன் பொட்டாஷ் மத்திய அரசின் மானியச் செலவினம் 420 டாலராக இருக்கும்.மானியச் செலவை குறைக்கும் நடவடிக்கையாக, உர நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதற்கு பதிலாக, விவசாயிகளுக்கு நேரடியாக மானியம் வழங்குவது குறித்து, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|