பதிவு செய்த நாள்
29 நவ2011
00:11
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளிலும், காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இந்நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும், பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. இதைத் தொடர்ந்து, நாள் முழுவதும் பங்கு வியாபாரம் சூடுபிடித்து காணப்பட்டது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், வங்கி, மின்சாரம், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், மோட்டார் வாகனம் உள்ளிட்ட ஒரு சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பாடு குறைவாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 471.70 புள்ளிகள் அதிகரித்து, 16,167.13 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 16,186.68 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,888.28 புள்ளிகள் வரையிலும் சென்றது." சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பஜாஜ் ஆட்டோ மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனப் பங்குகளை தவிர, ஏனைய 28 நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.தேசியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' , 141.25 புள்ளிகள் உயர்ந்து, 4,851.30 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 4,859.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,766.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|