பதிவு செய்த நாள்
13 டிச2011
00:27

புதுடில்லி: நாட்டின் தொழில் துறை உற்பத்தி, சென்ற அக்டோபர் மாதத்தில், 5.1 சதவீதம் என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது.
அதேசமயம், கடந்த 2010ம் ஆண்டு அக்டோபரில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி 11.3 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது என, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2004-05ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு, தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடப்படுகிறது.
இவ்வகையில், கடந்த 2009ம் ஆண்டு, ஜூன் மாதத்திற்கு பிறகு, சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி பின்னடைவை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுரங்கத் துறை பல்வேறு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி மிகவும் சரிவடைந்துள்ள நிலையில், சுரங்கம், தயாரிப்பு மற்றும் பொறியியல் துறைகளின் உற்பத்தி கடும் பின்னடைவை கண்டுள்ளன. பல்வேறு அமைப்புகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஆய்வாளர்கள், கடந்த அக்டோபரில், தொழில் துறை உற்பத்தி 3.2 சதவீத வளர்ச்சி அல்லது 5 சதவீதம் என்ற அளவில் பின்னடைவு காணும் என முன்னறிவிப்பு செய்திருந்தன.
கணக்கீட்டு மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி 6 சதவீதம் பின்னடைவை கண்டுள்ளது. தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கீடு செய்வதில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு 75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. கடந்த 2010ல், அக்டோபரில், தயாரிப்பு துறையின் உற்பத்தி 12.3 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.
சென்ற அக்டோபரில் சுரங்கத் துறையின் உற்பத்தி 7.2 சதவீதம் என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 6.1 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது. இதேபோன்று, பொறியியல் துறையும் 25.5 சதவீத எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது.
அதேசமயம், 2010ம் ஆண்டு அக்டோபரில், இத்துறை 21.1 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.
நுகர்பொருட்கள் துறை
நுகர்பொருட்கள் துறையின் உற்பத்தி, 0.3 சதவீதம் பின்னடைவை கண்டுள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில், இத்துறை 14.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.
மேலும், நுகர்வோர் சாதனங்கள் அல்லாத இதர துறையின் உற்பத்தி 1.3 சதவீதம் பின்னடைவை கண்டுள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில், இத்துறை 5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.
அடிப்படை தயாரிப்பு பொருட்கள் துறையின் உற்பத்தியும், 0.1 சதவீதம் என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில், இத்துறை 9.8 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. இடைநிலை பொருட்கள் தயாரிப்பு துறையின் உற்பத்தி, 4.7 என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில், இத்துறை 9.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.
மின் துறை
பல்வேறு துறைகளின் உற்பத்தி எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ள நிலையில், மின்சார துறையின் உற்பத்தி 5.6 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு அக்டோபரில் இத்துறையின் வளர்ச்சி 8.8 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, தற்காலிக புள்ளி விவர அடிப்படையில், 1.9 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது என அறிவிக்கப்பட்டிருந்தது. இது, மறுமதிப்பீட்டில், 2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2011-12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 3.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் (2010-11) இதே காலத்தில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 8.7 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
பொருளாதார மந்தநிலை
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார சுணக்க நிலையால், இந்திய பொருளாதார வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என பட்ஜெட்டிற்கு முந்தைய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சென்ற வாரம் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் என்ற அளவில் தான் இருக்குமென மறுமதிப்பீடு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 9 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு, 6.9 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது.
பணவீக்கம்
தொழில் துறை உற்பத்தியின் பின்னடைவிற்கு பணவீக்க உயர்வு முக்கிய காரணியாக உள்ளது. 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நாட்டின் பொது பணவீக்கம் 9 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, 2010ம் ஆண்டு மார்ச் முதல், இதுவரையில், 13 முறை வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து, வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதனால், நிறுவனங்கள் விரிவாக்க திட்டங்கள் மற்றும் புதிய முதலீடுகளுக்கு வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதை நிறுத்தி கொண்டன. இதுவும், தொழில் துறை உற்பத்தி சரிவடைய முக்கிய காரணம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|