பதிவு செய்த நாள்
26 டிச2011
12:00
சென்னை:தமிழகம் முழுவதும், துண்டிக்கப்பட்ட 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவையை திரும்ப வழங்குவதற்கான கட்டணத்தை, தனியார் முகவர்களிடம் இருந்து வசூலிக்க பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.பி.எஸ்.என்.எல்., முகவர்களாகச் செயல்பட்ட தனியார் நிறுவனங்கள் செய்த முறைகேட்டால், தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை துண்டிக்கப்பட்டது குறித்து, கடந்த 24ம் தேதி, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, தமிழக மற்றும் சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர்களுடன், பி.எஸ்.என்.எல்., விற்பனை மற்றும் வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த உயரதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.
கூட்டத்தில், தனியார் முகவர்களால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், உரிய ஆவணங்களை அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் காண்பித்து, எவ்வித கட்டணமுமின்றி சேவையை புதுப்பித்துக் கொள்ளலாம்.மேலும், தனியார் நிறுவனங்கள் செய்த முறைகேட்டால், பாதிக்கப்பட்ட 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவையை திரும்ப வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். இதற்கான கட்டணத் தொகையை, சம்பந்தப்பட்ட தனியார் முகவர்களிடமிருந்தே வசூலிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆவடியில் உள்ள, "ஆதர்ஷ் எலக்ட்ரானிக்ஸ்' உட்பட பி.எஸ்.என்.எல்., முகவர்களாகச் செயல்பட்ட, அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை பி.எஸ்.என்.எல்., அனுப்பியுள்ளது.உரிய ஆவணங்கள் வழங்கியும், சேவை துண்டிக்கப்பட்ட ஆவடியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு எவ்வித கட்டணமுமின்றி சேவை திரும்ப அளிக்கப்பட்டுள்ளது என பி.எஸ்.என்.எல்., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|