பதிவு செய்த நாள்
06 ஜன2012
00:42
மாருதி சுசூகி நிறுவனம், சிறிய வகை கார் பிரிவில் "எக்ஸ்.ஏ. ஆல்பா' என்ற புதிய பன்முக பயன்பாட்டு மாதிரி காரை வடிவமைத்து அறிமுகம் செய்துள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்ப இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வரவேற்புக்கு ஏற்ப இந்த கார் உருவாக்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இக்கார் விற்பனைக்கு விடப்படும் என மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஷின்ஜோ நாகநிஷி தெரிவித்தார்.
புதுடில்லி, பிரகதி மைதானத்தில் சர்வதேச மோட்டார் வாகன கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இக்கண்காட்சியில், 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 50 மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இக்கண்காட்சியில், 25 புதிய வகை வாகனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. 1,200 பங்கேற்பாளர்களும், 1 லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சர்வதேச கண்காட்சி, 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் "எக்ஸ்.ஏ.ஆல்பா' கார் குறித்து நாகநிஷி கூறுகையில், " உலகளவில், இந்தியா மோட்டார் வாகனங்களுக்கு மிகப்பெரிய மையமாக உருவெடுத்துள்ளது.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார், வாடிக்கையாளர்களின் ஆலோசனை மற்றும் வரவேற்புக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு விடப்படும். இந்தியாவில், வாகனங்களுக்கான தேவை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே, இப்புதிய பயன்பாட்டு கார், குறைந்த எரிபொருளில் அதிக தூரம் செல்லக் கூடிய வகையில், இந்திய சாலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படும்' என்று தெரிவித்தார்.மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் (சந்தைப்படுத்துதல்) சஷாங் ஸ்ரீவத்சவா கூறியதாவது:மாருதி சுசூகி இந்தியாவின் கார்கள் விற்பனை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.
தற்போது, இந்திய கார்கள் சந்தையில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தைப் பங்களிப்பு 45 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நிறுவனம், 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த 2011ம் ஆண்டில், 1 லட்சத்து 38 ஆயிரம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு 2012ம் ஆண்டிலும் ஏற்றுமதி நன்கு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
நிறுவனத்தின் பல்வேறு வகை மாடல்களில், "ஆல்டோ' காரின் விற்பனை பங்களிப்பு 30 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மாதம் ஒன்றுக்கு சராசரியாக 27 ஆயிரம் கார்கள் "ஆல்டோ' கார்கள் விற்பனை ஆகின்றன.தமிழ்நாட்டிற்கான கார்கள் விற்பனையில், சென்னையில் 40 சதவீத கார்களும், சென்னை தவிர்த்த இதர நகரங்கள் மற்றும் இதர பகுதிகளில் நிறுவனத்தின் கார்கள் விற்பனை 50 சதவீத அளவிற்கு உள்ளது.இவ்வாறு ஸ்ரீவத்சவா கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|