பதிவு செய்த நாள்
20 ஜன2012
01:06
புதுடில்லி:நடப்பு கரீப் பருவத்தில் (2011-12ம் ஆண்டு) இதுவரையிலுமாக நெல் கொள்முதல் 14 சதவீதம் உயர்ந்து 2 கோடி டன்னை தாண்டியுள்ளது. இது, நடப்பு முழு கரீப் பருவத்தில் 3.50 கோடி டன்னை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய உணவுக் கழகம் (எப்.சி.ஐ) உள்ளிட்ட அரசு முகமை அமைப்புகள், விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்கின்றன.
பஞ்சாப் மாநிலம்:பஞ்சாப் மாநிலத்தில் நெல் கொள்முதல் குறைந்துள்ள போதிலும், ஒட்டு மொத்த நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு கரீப் பருவத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நெல் சாகுபடி சிறப்பாக உள்ளது. இதனால், நடப்பு பருவத்தில்,3.50 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆந்திரா, சத்திஸ்கர், அரியானா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஒடிசா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் நெல் உற்பத்தி மிகவும் அதிகரித்துள்ளதையடுத்து, இதுவரையிலுமாக 2 கோடி டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு சில தினங்களுள் நெல் கொள்முதல், கடந்தாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட, 14.33 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2010-11ம் ஆண்டு, கரீப் பருவத்தில், நெல் கொள்முதல் 3.40 கோடி டன்னாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2009-10ம் ஆண்டுப் பருவத்தில், 3.20 கோடி டன்னாக இருந்தது.இது வரையிலுமாக, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சந்தைகளுக்கு குறைந்த அளவில்தான் நெல் வரத்து உள்ளது.
இந்திய உணவுக் கழகம் உள்ளிட்ட அரசின் முகமை அமைப்புகள், இம்மாநிலத்தில் அக்டோபர் 1ம் தேதி வரையிலுமாக, 77 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளன.
86 லட்சம் டன் :அதேசமயம், கடந்தாண்டு இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்முதல் 86 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது.
சத்திஸ்கர் மாநிலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்முதல், 27 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
இது, கடந்தாண்டை விட அதிகமாகும். அரியானா மாநிலத்தில், நடப்பு கரீப் பருவத்தில் இதுவரையிலுமாக, 20 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 16 லட்சம் டன்னாக இருந்தது.
இதைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் இருந்து, மத்திய தொகுப்புக்கு 24 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டின் இதே காலத்தில், இம்மாநிலத்திலிருந்து, 6 லட்சம் டன் என்ற அளவிற்கே கொள்முதல் இருந்தது.
இதே காலத்தில், உத்தரபிரதேச மாநிலத்தின் நெல் கொள்முதல், 10 லட்சம் டன்னிலிருந்து, 18 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
இதே போன்று, இதே காலத்தில், ஒடிசா, பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் நெல் கொள்முதலும் கடந்தாண்டு கரீப் பருவத்தை விட, நடப்பாண்டு கரீப் பருவத்தில் அதிகரித்துள்ளது.கொள்முதல் இலக்கு:இது குறித்து மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் கூறுகையில், " நடப்பாண்டு நெல் கொள்முதல் செய்வதற்கான இலக்கு எட்டப்படும். பல மாநிலங்களில், நெல் சாகுபடி சிறப்பாகவே உள்ளது' என்று தெரிவித்தார்.இந்திய உணவுக் கழகம், சாதா வகை நெல்லை ஒரு குவிண்டால், 1,000 ரூபாய் என்ற அளவிலும், ஒரு டன் உயர்ரக நெல்லை 1,030 ரூபாய் என்ற விலையிலும் கொள்முதல் செய்து வருகிறது.
இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில முகமை அமைப்புகள் நெல்லை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்து, பொது வினியோக திட்டத்தின் கீழ், அரிசியாக வினியோகிப்பதுடன் மத்திய மற்றும் மாநில தொகுப்புகளில் போதிய அளவிற்கு இருப்பு வைத்து கொள்கின்றன.கையிருப்பு:நடப்பு 2012ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, மத்திய, மாநில முகமை அமைப்புகள் 2.90 கோடி டன் நெல்லை கையிருப்பு வைத்துள்ளன.
இது, மத்திய அரசின் கொள்கை திட்டத்தின் படி, 2 கோடி டன் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற அளவை விட மிகவும் அதிகம். மத்திய அரசிற்கு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ், வினியோகம் செய்வதற்கு மாதம் ஒன்றுக்கு, 10 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இந்நிலையில், நடப்பு கரீப் பருவத்தில், நெல் கொள்முதல் நன்கு உள்ளதால், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது வினியோக திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு, இந்த கையிருப்பு மிகவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|