பதிவு செய்த நாள்
17 பிப்2012
00:08
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், உள்நாட்டில் உருக்கு பயன்பாடு குறையும் என தனியார் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தியில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2010-11ம் நிதியாண்டில், இத்துறை 9.9 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. பொருளாதார நெருக்கடியால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டில் பணவீக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அதை கட்டுப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால், அடிப்படை கட்டமைப்பு துறை நிறுவனங்களும், மோட்டார் வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதனால், இத்துறை நிறுவனங்களின் உருக்கு பயன்பாடு குறைந்து போனது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், நாட்டின் உருக்கு உற்பத்தி, 6.9 சதவீதம் வளர்ச்சிகண்டு, 5.82 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், இவற்றின் பயன்பாடு, தற்காலிக புள்ளி விவரத்தின்படி, 4.7 சதவீதம் மட்டும் வளர்ச்சிகண்டு, 5.68 கோடி டன்னாக குறைந்தது.மதிப்பீட்டு காலத்தில், உருக்கு இறக்குமதி, 55.8 லட்சம் டன்னாக குறைந்துள்ள நிலையில், ஏற்றுமதி, 24 சதவீதம் அதிகரித்து, 34.2 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது."சென்ற நிதியாண்டில், உருக்கு பயன்பாடு, 9.9 சதவீதம் வளர்ச்சிகண்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் இதன் வளர்ச்சி, 8 சதவீதம் என்றளவில் தான் இருக்கும்' என, மத்திய உருக்குத் துறை செயலர் பி.கே. மிஸ்ரா தெரிவித்தார்."பொருளாதார மந்த நிலையிலிருந்து, பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதையடுத்து, வரும் 2012-13ம் நிதியாண்டில், இதற்கான தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என, தனியார் உருக்கு நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|