பதிவு செய்த நாள்
27 பிப்2012
10:10
திருச்சி : ''கல்விக் கடனுக்கான வட்டியைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது,'' என்று பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் திருச்சியில் நேற்று கூறினார். திருச்சி வந்த பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் பிரதீப் சௌத்ரி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எஸ்.பி.ஐ., வங்கி, ஒரு லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்துள்ளது. தமிழகத்தில் கல்வி, விவசாயம், சிறுதொழில் கடன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒன்பது கார்ப்பரேட் கிளைகள் உள்பட, 837 கிளைகள் உள்ளன. 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் விவசாயத்துக்கும், 10 ஆயிரம் கோடி வீடு கட்டவும், 2,300 கோடி ரூபாய் கல்விக்காகவும் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில், 1,600 கோடி ரூபாயும், இரண்டாவது காலாண்டில், 2,850 கோடியும், மூன்றாவது காலாண்டில், 3,250 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளோம். நான்காவது காலாண்டில் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். வங்கியின் வளர்ச்சி, 25 முதல் 30 சதவீதமாக உள்ளது. 'ரிசர்வ்' வங்கியின் கொள்கை முடிவுப்படி வட்டி வசூலிக்கப்படுகிறது. கல்விக் கடனுக்கான வட்டியைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம். மற்ற பிரிவுகளில் ரிசர்வ் வங்கி வழிகாட்டல்படி, வட்டி வசூலிப்போம். எஸ்.பி.ஐ., வங்கி முறையாக கணக்குகளை தாக்கல் செய்து வருகிறது. கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் கூட்டமைப்பில், எஸ்.பி.ஐ.,யும் உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டமைப்பில் பேசி முடிவு செய்யப்படும். சர்வதேச விமான நிறுவனங்களே நிதி நெருக்கடியில் உள்ளன. வீட்டுக்கடன் விண்ணப்பிப்போர் சரியான ஆவணங்களைத் தாக்கல் செய்தால், 4 முதல் 11 நாட்களுக்குள் கடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|