பதிவு செய்த நாள்
29 பிப்2012
02:24
புதுடில்லி:சென்ற ஜனவரி மாதத்தில், நாட்டின் முக்கிய எட்டுத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 0.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 6.4 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது என, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் சென்ற டிசம்பர் மாதத்தில், இத்துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 3.1 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் தொழில் துறையில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை முக்கிய எட்டு துறைகளாக விளங்குகின்றன. ஒட்டுமொத்த அளவில், தொழில் துறை உற்பத்திக் குறியீட்டு எண் கணக்கிடுவதில், இத்துறைகளின் பங்களிப்பு, 37.9 சதவீதம் என்றளவில் உள்ளது.
சென்ற ஜனவரி மாதத்தில், கச்சா எண்ணெய், உருக்கு, இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் ஆகிய துறைகள் எதிர்மறை வளர்ச்சியை கண்டு பின்னடைந்துள்ளன. அதேசமயம் நிலக்கரி, சிமென்ட், உரம், மின்சாரம் போன்ற துறைகளின் உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாத காலத்தில், முக்கிய எட்டுத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 4.1 சதவீதம் என்றளவில் உள்ளது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில், 5.7 சதவீதம் என்றளவில் சற்று உயர்ந்திருந்தது.சென்ற டிசம்பர் மாதத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி, 2 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 15.8 சதவீதம் என்றளவில் அதிகரித்திருந்தது.
மதிப்பீட்டுக் காலத்தில், இயற்கை எரிவாயு உற்பத்தி, -6.3 சதவீதம் என்ற அளவிலிருந்து, 8.9 சதவீதம் என்றளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி, 8.7 சதவீதத்திலிருந்து, 4.6 சதவீதம் என்றளவில் குறைந்துள்ளது. அதேசமயம், உருக்கு உற்பத்தி, 8.7 சதவீதம் என்ற அளவிலிருந்து, -2.9 சதவீதம் என்றளவில் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது.
நிலக்கரி உற்பத்தி, -1.3 சதவீதத்திலிருந்து, 7.5 சதவீதம் என்றளவிலும், உரம் உற்பத்தி, 5.9 சதவீதத்திலிருந்து, 4 சதவீதம் என்றளவிலும், சிமென்ட் உற்பத்தி, 1.8 சதவீதத்திலிருந்து, 10.6 சதவீதம் என்றளவிலும், மின்சாரம், 9.7 சதவீதத்திலிருந்து, 2.4 சதவீதம் என்றளவிலும் வளர்ச்சியைக் கண்டுள்ளன என்று, இந்த அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|