பதிவு செய்த நாள்
01 மார்2012
01:50
திருப்பூர்:தமிழகத்தில் அமல்படுத்தப்படும் வார மின் விடுமுறை காரணமாக, நூற்பாலைகளில் 23.8 சதவீத உற்பத்தியை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. இதனால், ஒட்டுமொத்த ஜவுளித் தொழிலும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், வெள்ளக்கோவில், வேடசந்தூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம் உட்பட, தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இந்திய அளவில் அதிக நூற்பாலைகளை உறுப்பினர்களாகக் கொண்ட "டாஸ்மா' சங்க உறுப்பினர்கள் மட்டும் தினமும் 1.2 கோடி கிலோ பருத்தி நூலிழையை உற்பத்தி செய்கின்றனர்; மொத்த உற்பத்தியில் பின்னலாடை நூலிழையின் பங்கு 60 சதவீதமாக உள்ளது.
திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள பனியன் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தேவையான பின்னலாடை நூலிழையின் உற்பத்தி, நாளொன்றுக்கு 70 லட்சம் கிலோ என்ற அளவில் உள்ளது. இதில், 40 லட்சம் கிலோ நூலிழை தினமும் பயன்படுத்தப்படுகிறது. விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு தேவையான, வார்பு நூலிழையும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
உயரழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நூற்பாலைகளுக்கு 2008 நவ., 1ம் @ததியிலிருந்து மாலை 6.00 - இரவு 10.00 மணி வரை மின்சாரப் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்து, மொத்த மின் பயன்பாட்டில் 40 சதவீதம் மின் வெட்டு அமலாக்கப்பட்டது. கடந்த வாரம் வரை, மாலை நேர மின் கட்டுப்பாடும், 20 சதவீத மின்வெட்டும் அமலில் இருந்தது.
மின்தடை நேரங்களில் நூற்பாலைகள் இயங்க வேண்டுமெனில், 650 கி.வா., முதல் 2,500 கி.வா., திறனுள்ள ஜெனரேட்டரை இயக்க வேண்டும். டீசலுக்கு கூடுதலாக செலவிட முடியாமல், நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துக் கொண்டுள்ளன.வழக்கமாக, மூன்று "ஷிப்ட்'டுகளாக இயங்கும் நூற்பாலைகள், கடந்த சில மாதங்களாக ஒரு "ஷிப்ட்' வேலையை நிறுத்தியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமைகளில் நூற்பாலைகள் இயங்குவது, கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மின் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒரு வாரத்தில் மொத்தமுள்ள 168 மணி நேரத்தில், 48 மணி நேரம் மின் விடுமுறை ஏற்படுகிறது. வழக்கம் போல், மாலை 6.00 முதல் 10.00 மணி வரை மின்சாரத்தை பயன்படுத்த தடையிருப்பதால், வாரத்தில் 20 மணி நேரம் வீணாகிறது.
மீதியுள்ள 100 மணி நேர மின்சாரத்தில், ஒரு வார உற்பத்தியை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள, 40 சதவீத மின்வெட்டு தொடர்ந்தால், 60 சதவீத மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். அதிலும், மக்கள் பயன்பாட்டுக்கான நான்கு மணி நேர மின்தடை, தொழில் துறையினருக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனால், ஒரு வாரத்தில் நூற்பாலைகள் செய்ய வேண்டிய 100 சதவீத உற்பத்தியில், 23.80 சதவீத அளவிற்கே உற்பத்தி செய்ய முடியும். ஒரு "ஷிப்ட்'டுக்கு 40 லட்சம் கிலோ வீதம், மூன்று "ஷிப்ட்'டுகளில் 1.20 கோடி கிலோ நூலிழை உற்பத்தியாகி வந்த நிலை மாறி, 40 லட்சம் கிலோ உற்பத்தி செய்வதே குதிரைக் கொம்பாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் (டாஸ்மா) தலைவர் அப்புக்குட்டி, முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் ஆகியோர் கூறியதாவது:நூற்பாலை உற்பத்தி குறைந்தால், பின்னலாடை உள்ளிட்ட ஒட்டுமொத்த ஜவுளித் தொழிலும் ஸ்தம்பிக்கும். எனவே, காற்றாலை மின்சாரம் உட்பட வெளியே இருந்து மின்சாரத்தைப் பெற்று, விடுமுறை நாளில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள வாட் வரியை தள்ளுபடி செய்வதன் மூலமாக, விலை குறையும். எனவே, மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|